குமாரின் கையை பிடித்தவாறு, ரித்திகா மூச்சு இரைக்க நடந்தாள். வயிற்றில் பசி!
சாலையில் ஒருவரும் இல்லை! அவ்வப்போது, காவல்துறை வேனில் வந்து அதிகாரிகள் விசாரிப்பார்கள். போய்விடுவார்கள். ஒரு அடிகூட, வேனில் அழைத்துச் செல்லமாட்டார்கள்.
" குமார்! இப்படி ஈவு, இரக்கமில்லாம எப்படி அவங்களாலே நடந்துக்க முடியுது?"
" அவங்களைச் சொல்லி குற்றமில்லே, அவர்கள் மனம் காய்த்துப் போய்விட்டது. நம்மைப் போல, பலபேரை சந்திக்க வேண்டியிருக்கு, உதவி செய்ய முடியலே, காய்ந்து விட்டது, மனசு!"
" பேசக்கூட முடியலே, இன்னும் ரொம்ப தூரமா?"
" ரித்தி! இப்பத்தான், மல்லேஸ்வரத்தைக் கடந்து, மெயின் ரோடுக்கே வந்திருக்கோம், ஹைவேயே வரலே...."
" ஈசுவரா!"
குமாருக்கு அவள் கஷ்டம் புரிந்தாலும், அவனால் என்ன செய்யமுடியும்?
அவனும் அவள் அழைத்ததுபோல, அழைத்தான், "ஈசுவரா!"
இவர்களின் அபயக்குரல் ஆண்டவனை எட்டியிருக்கவேண்டும்!
" நில்லுங்க!" பின்னாலிருந்து வந்த குரல் கேட்டு, நின்றனர்.
காவலர் ஒருவர், வேனிலிருந்து இறங்கினார்.
மீண்டும் அதே கேள்வி, அதே பதில்!
" உங்களை பார்த்தால், பரிதாபமாயிருக்கு! என்னால் முடிந்தது, உங்களை வேனில் ஏற்றிக்கொண்டு, இலவச உணவு தரும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறேன், வாங்க!"
அவர் புண்ணியத்தில், இருவரும் வயிறு நிறைய உண்டனர்.
குமார், உணவு வினியோகம் செய்தவரின் அருகில் சென்று, ரகசியமாக தங்கள் நெடுந்தூரப் பயணத்தைச் சொல்லி, இரவுக்கான உணவையும் பேக்கட்டில் எடுத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தனர்.
நெடுஞ்சாலை வந்ததும், தலைநிமிர்ந்து வழிகாட்டும் பலகையை பார்த்தனர்.
" ஹைதராபாத்! 590 கிலோமீட்டர்!"
" இப்பத்தான், நம்ம பயணமே துவங்குதா?"
" ஆமாம், ரித்தி! மனசை திடப்படுத்திக்க! வா!"
சிறிது தூரம் சென்றதும், இடப்புறம் சாலையிலிருந்து ஒரு நாலுபேர் சேர்ந்துகொண்டனர்.
" ஹைதராபாத் தானே போறீங்க, நாங்களும் அங்கே தான் போகிறோம், சேர்ந்து போவோம்....வாங்க!"
ரித்திகாவுக்கு சிறிது ஆறுதல் கிடைத்தது.