நடைப் பயணம் தொடர்ந்தது. பேச்சும்தான்!
" ஆயிரத்திலே ஒருவர் உயிரை காப்பாற்ற, ஆயிரம் பேரை சாகடிக்கிறாங்களே, இது என்ன நியாயம்?"
" இதை இப்ப யாரிடம் கேட்பது? எல்லோரும் முகமூடி கள்ளனைப்போல கவசம் போட்டு வாயை மூடிக் கிட்டாங்களே......"
" இந்த ஊரடங்கு சட்டம் எப்ப போகும்?"
" கொரோனா எப்ப போகும்?"
" தெரியலியே....."
" அது தெரியறவரையிலும், இருக்கும்......"
" ஆமாம்! நாம இங்கிருந்து கிளம்பி நம்ம ஊர் போவதுபோல, நம்ம ஊரிலே உள்ள கன்னடக்காரங்க, அங்கேயிருந்து கிளம்பி வந்துகொண்டிருப்பாங்களா" " வழியிலே பார்க்கத்தானே போறோம்....."
அப்போது சைக்கிளில் ஒருவர் கடந்துபோனார். இவர்களை பார்த்ததும், அவர் சைக்கிளை நிறுத்தி, "ஹைதராபாத்தா?" என்று கேட்டார். " ஆமாம்"
அவர் உடனே சைக்கிளிலிருந்து இறங்கிவந்து, ரித்திகாவிடம் " பாவம்! உங்களாலே நடக்க முடியாது. உங்க புருஷன் யாரு?" என்று கேட்டார்.
குமார் எதிரில் நின்றதும், சைக்கிளை குமாரிடம் கொடுத்து, "கேரியரிலே உங்க மனைவியை உட்காரவைத்து, நீங்க சைக்கிளை தள்ளிக்கிட்டு வாங்க! நானும் நடந்துவரேன்....."
அனைவரும் ஓடிவந்து, அந்த இளைஞனை கையெடுத்து கும்பிட்டனர்.
இப்படியே பத்து நாட்களில், அனந்தபூர் அடைந்தனர்.
ரித்திகாவுக்கு சைக்கிளில் உட்கார்ந்து வருவதுகூட முடியாத நிலையில், அவளுக்கு இடுப்புவலியும் சேர்ந்துகொண்டது.
இனி, அவளை அழைத்துச் செல்ல இயலாது என்பதால், அருகிலிருந்த மருத்துவ மனைக்கு சென்றனர்.
அது மூடியிருந்தது. ஏனெனில், அங்கிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று வந்ததால், மனையை மூடிவிட்டார்கள்.
வேறு மருத்துவமனை அருகில் உள்ளதா என விசாரித்தனர்.
" ஊருக்குள்ளே இருக்கு! இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம்! அதுவரையிலும், இவங்களாலே தாங்கிக்க முடியுமா?"
ரித்திகா இடுப்புவலியில் துடித்தாள்.