வாசம் அடிக்கும்!” முகர்ந்து பார்த்து விட்டு சிரித்தான் சிறுவன்.
கோடாங்கிக்கு தன் தாயின் வாசனை ஞாபகத்தில் வந்தது.
“நாலஞ்சு நாள இந்தப் புடவையைக் காணோமா?...எனக்குத் தூக்கமே வரலை!...அப்பா கிட்டே கேட்டேன்….அவர்தான் “கோடாங்கிக்குக் குடுத்தாச்சு”ன்னு சொன்னாரு!...அதான் அதை வாங்கிட்டுப் போக வந்தேன்…நான் இதை எடுத்திட்டுப் போகட்டுமா?”
கோடாங்கியின் கண்களில் நீர் பொங்கியது. “தாராளமா எடுத்திட்டுப் போப்பா!...அது செரி…இந்த நேரத்துல தனியா வந்திருக்கியே?...அப்பா தேட மாட்டாங்களா?”
“ம்ஹும்…நான் வந்தது…அப்பாவுக்கும் புது சித்திக்கும் தெரியாது!...அவங்க என்னைத் திண்ணைல படுக்க வெச்சிட்டு, கதவைச் சாத்திக்கிட்டு…வீட்டுக்குள்ளார போய்ப் படுத்துக்கிட்டாங்களே?”
கோடாங்கியின் இருதயம் ஈட்டி பாய்ந்தாற் போல் வலித்தது.
“சரிப்பா…நீ இந்த நேரத்துல தனியா வீட்டுக்குப் போக வேண்டாம்!...இங்கியே அம்மாவைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டுத் தூங்கு!...காலைல நானே கொண்டு போய் உன்னை உன் வீட்டுல விட்டுடறேன்!...சரியா?”
“ஓ” என்று தலையாட்டிய சிறுவனைத் தூக்கி தோளில் சாய்த்துக் கொண்டு, சுடுகாட்டினுள் நுழைந்த கோடாங்கி, மறுபடியும் அதே புங்க மரத்தடியில் வந்தமர்ந்தான்.
கோடாங்கியின் மடியில் உறங்கலானான் சிறுவன்.
தன் தாயின் புடவையைத் தாயாய் எண்ணிக் கொண்டு, இறுகக் கட்டியபடி, தாய் வாசத்தோடு தூங்கும் அந்தச் சிறுவனை வைத்த விழி வாங்காமல் பார்த்தபடி அமர்ந்திருந்தான் கோடாங்கி.
அன்று அவன் குறி சொல்லப் போகவில்லை.