சிறுகதை - மாற்றி எண்ணிப் பார்! - ரவை
கப்பலே கவிழ்ந்ததுபோல், சிவன் கன்னத்தில் கையூன்றி சோகத்தில் மூழ்கியிருந்தான்.
பக்கத்து சீட், பத்மா பரிதாபம் கொண்டு, அவனருகில் அமர்ந்து ஆறுதல் கூறினாள்.
" இது அக்கிரமங்கறதை சொல்லக் கூட, இந்த ஆபீஸிலே ஆளில்லை! இன்றைக்கு நம்ம நாட்டிலே நிலமை இதுதான்!
பாரதி அன்னிக்கே பாடினான், 'கொஞ்சமோ பிரிவினைகள், ஒருகோடி என்றால் அது பெரிதாமோ?'!
சாதி, மதங்களிலே மட்டுமில்லே, இந்தப் பிரிவினை! ஏழை, பணக்காரன் மட்டுமல்ல, படித்தவன், படிக்காதவன் மட்டுமல்ல, நல்லவன், கெட்டவன் மட்டுமல்ல, இப்ப இங்கே நடந்திருக்கே, இந்த வேண்டியவன், வேண்டாதவன்; பிடித்தவன், பிடிக்காதன், தெரிந்தவன், தெரியாதவன், இப்படி எத்தனையோ!
அந்த மேனேஜருக்கு உன்னை பிடிக்காமல் போக காரணம், நீ மதிக்கிறதில்லே அவரைன்னு ஒரு அபிப்பிராயம்! சமயம் பார்த்து கழுத்தை அறுத்துட்டார்.
சிவா! இந்தமாதிரி சிக்கல், எல்லா இடத்திலும் இருக்கு!
அதனாலே, நாம் இந்த மாதிரி நேரங்களிலே தைரியத்தை இழக்காமல், அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்கணும்......
ஒருவேளை, இதுவே உன் நல்லதற்காகவும் இருக்கலாமே!
இப்படி நடக்கலேன்னா, நீ இந்த ஆபீஸைவிட்டு நகராம, கம்மி சம்பளத்திலேயே உழன்று கொண்டிருப்பே!
உன்னை வேற லெவலுக்கு அழைத்துப்போகவே, கடவுள் இதை செய்திருக்கிறார்.
எதையுமே மனிதர்கள் செய்வதா, நினைக்காதே! நல்லதோ, கெட்டதோ, அதை செய்வது மேலே உள்ள கடவுள், நம்ம மூலமா!
இப்ப நான் உன்னுடன் பேசறதேகூட, ஈசன் செயல்!
என் மூலமா, உனக்கு அவன் சொல்றான்: நடப்பது உன் நன்மைக்கே! துணிந்து நில்! விரிந்து பரந்து கிடக்குது, உலகம்! இந்த வேலை இல்லைனா, வேற எத்தனையோ வேலை!
வேலையே இல்லேன்னாலும், சிறுதொழில்!
அதுவும் இல்லேன்னா, கமிஷன் ஏஜெண்ட்! ஆசிரியர்! புரோக்கர்! எழுத்தாளர்! ப்ரூப் ரீடர், அச்சுக் கோர்ப்பவர், நியூஸ் ரிபோர்ட்டர், கறிகாய் விற்பனை, துணிக்கு இஸ்திரி போடறவன், பஸ் கண்டக்டர், டிரைவர், கிளீனர், இப்படி அடுக்கிண்டே போகலாம்!
சிவா! என் மூலமா, ஆண்டவன் உனக்கு சொல்றான், 'இந்த வேலையை மட்டுமே நம்பி உன்னை நான் அனுப்பவில்லை, நிறைய வேலை நான் தரேன், என்னை நம்பு'ன்னு சொல்றான்.