சிறுகதை - பணமா? நிம்மதியா? - ரவை
" ஐயா! உங்களைப் பார்க்க நடிகை சப்னா எப்ப வரலாம்னு போனிலே இதுவரையிலும் மூணு தடவை கேட்டுட்டாங்க, என்ன பதில் சொல்ல?"
" அவங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? எதுக்கு என்னை பார்க்கணுமாம்?"
" கேட்டேனே, அதை நேரிலே உங்களிடம்தான் சொல்லுவாங்களாம்......"
" எதுக்காக இருக்கும்னு நீ நினைக்கிறே?"
" ஐயா! என் ஊகம், பண சம்பந்தமாக இருக்கும்....."
" நடிகை சப்னாவின் ரேட் ஏழு கோடி ரூவா, பணத்திலே புரள்றாங்க, அவங்க ஏன் என்னிடம் பணத்துக்காக வரப் போறாங்க? வேற என்னவாக இருக்கும்னு யோசி!"
"ஐயா! நீங்க தப்பா நினைக்கலேன்னா, எனக்கு தோணுவதை சொல்றேன், அவங்களிடம் பணம் இருக்கு, ஆனா சரியான துணையில்லே; இதுவரையில் நாலு நடிகர்களுடன் வாழ்ந்து பார்த்தாச்சு, சரிப்படலே... ஒருவேளை, ஐந்தாவதா ...."
" கிண்டலா? சரி சரி, வரச் சொல், அவங்களை...."
" உடனேயா?"
" ஆமாம்!" செக்ரடரி நக்ர்ந்ததும், முதலாளி முத்தய்யா தன்னை நிலைக் கண்ணாடியில் போய் பார்த்துக்கொண்டார்!
'அழகாகத்தான் இருக்கிறேன்' என்று மீசை, தலையை சரிசெய்தார்.
முத்தய்யா ஒரு பெரிய ஓட்டலின் முதலாளி! எல்லா பெரிய நகரங்களிலும், அந்த ஓட்டலின் கிளைகள் பிரபலம்! மொத்த லாபமே, ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூவா இருக்கும்!
சென்னையில் உள்ள கிளையில்தான், முத்தய்யா நாள் முழுதும் இருப்பார்!
அந்தக் கிளைக்கு சப்னா வந்துபோவது உண்டு!
முத்தய்யா, அவளுக்கு விசேஷ மரியாதை எதுவும் ஒருநாளும் தந்ததேயில்லை. ஒரு சிரிப்பு, ஒரு கும்பிடு, அவ்வளவுதான்!
சப்னாவுடன் வருவது, அவளின் மேனேஜர் மகேசன்! அவன்தான், முத்தய்யாவிடம் பேச்சுக் கொடுப்பான்!
சாமர்த்தியமாக, முத்தய்யா பிடி கொடுக்காமல் பேசுவார்!
" ஐயா! அவங்க வந்துட்டாங்க......!"
முத்தய்யா, தன் வீடுதேடி வரும் விருந்தாளி என்பதால், எழுந்துவந்து அவளை சிரித்து வரவேற்றார்.
" வாங்க, வாங்க!" சப்னா முன்னேவர, அவளின் மேனேஜர் மகேசன் பின்னே வந்தான்!
வரவேற்பறையில், இருவரையும், சோபாவில் அமரச் சொன்னார்.