சிறுகதை - பணமா? நிம்மதியா? - ரவை
மகேசனின் கல்லூரி நண்பன் சுபாஷ் தன் வீட்டுக்கு வந்து அரட்டை அடித்தபோது, சுபாஷ் தன் தந்தையைப்பற்றி பெருமையாகப் பேசினான்.
" மகேஷ்! எங்கப்பா, இந்த 'சுடோகு' போடறதிலே,நல்ல திறமை. கஷ்டமானதைக்கூட சால்வ் பண்ணிடுவார்......"
" சுபாஷ்! 'சுடோகு' கேமிலே, இந்த 'கஷ்டம்' லெவலுக்கு மேலே'எக்ஸ்பர்ட்'னு இருக்கே, அதையே எங்கப்பா சால்வ் பண்ணிடுவார், ஈஸியா! ஓய்வுநேரத்திலே அவருக்குத் துணை 'சுடோகு'தான்!"
சமையலறையிலிருந்து மகேஷின் அம்மா உரக்ககுரல் கொடுத்தாள்.
" நல்லா 'சுடோகு' போட்டு என்ன பயன்? நல்லா வாழத் தெரியலியே....."
மகேஷுக்கு அம்மாவின் புலம்பல், இப்போதைக்கு ஓயாது எனத் தெரிந்து தன் வீட்டு விஷயம், நண்பனுக்கு தெரியவேண்டாமென,அவனை உடனே அனுப்பிவிட்டான்.
" அம்மா! அப்பாவுக்கு நல்லா வாழத் தெரியாதுன்னு சொல்றியே, நீ மட்டும் என்ன, சமயம், நேரம் தெரியாம நம்ம அப்பாவை குறை சொல்றது?"
" மகேஷ்! நினைக்கும் போதே, வயிறு எரியுதுடா, உங்கப்பா ஒரு அப்பாவி! ஒரு கோடி ரூவா சொத்தைவிட, கொடுத்த வாக்கை மீறக் கூடாதுன்னு, என்னை கட்டிக் கிட்டு, ஒரு கோடி ரூவாயை இழந்துட்டார்டா! அவர் ஒரு வாழத் தெரியாத அப்பாவிடா!
விவரமா சொல்றேன், நான் உங்கப்பாவின் அத்தை மகள். எங்கம்மாதான் உங்க அப்பாவை சிறுவயதில் தன் மகனாகவே வளர்த்தாள். அதனாலே, உங்கப்பாவுக்கு எங்கம்மாவிடம் விசுவாசம்.
திடீர்னு, எங்கம்மா உடம்பு சரியில்லாம போய், டாக்டர் கெடு வச்சிட்டார்.
அப்ப, எங்கம்மாவை ஒருநிமிஷம் கூட பிரியாமல் இருந்த உங்கப்பாவிடம் என் அம்மா, ஒரு சத்தியம் கேட்டு வாங்கிண்டா, என்னை அவர் கல்யாணம் பண்ணிக்கணும் என்று!
டாக்டர் சொன்ன கெடு, தப்பாகாம, எங்கம்மா போய் சேர்ந்துட்டா, சுமங்கலியா!
அதன்பிறகு, ஏதோ ஒரு காரணத்தினாலே, எங்கப்பா வுக்கும் உங்க அப்பாவின் அப்பாவுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு, குடும்பமே ரெண்டா பிரிஞ்சு ஆறு வருஷம் ஆச்சு!
எனக்கு கல்யாணம் செய்து வைக்க, எங்கப்பா வரன் தேடி புரோகரிடம் சொல்லிவைத்து எனக்கு வேறிடத்தில் பார்த்து கொண்டிருந்ததை கேள்விப் பட்டு, உங்கப்பா ஓடிவந்து, தான் எங்கம்மாவிடம் சத்தியம் செய்துகொடுத்து இருப்பதை தெரிவித்து, அதன்படி கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார்.
உங்கப்பா ஒரு கோடீஸ்வரனின் ஒரே மகன்! எல்லா சொத்துக்கும் ஒரே வாரிசு!