முதல் முப்பது வருஷம் கங்காதரனின் பெற்றோரும் உடன் இருந்தனர்.
அவர்களை கவனித்துக் கொள்வதில், தங்கள் கவலைகளை மறந்தனர்.
அவர்கள், பலமுறை, எச்சரித்ததை எப்படியோ சமாளித்தனர்.
" கங்கா! எங்க முதுமை காலத்திலே, எங்களை கவனிச்சிக்க, நீங்க இருக்கிற மாதிரி, உங்க முதுமையிலே, உங்களை கவனிச்சிக்க, ஒரு குழந்தை பெற்றுக்கணும்டா!"
" அப்பா! உனக்கு தெரிந்த இந்த விஷயம், மேல இருந்து உலகத்தையே பரிபாலனம் பண்றவனுக்குத் தெரியாதா? அவன் கண் திறந்து பார்க்கிற வரையில், பொறுமையா இருப்போமே!"
" உனக்கு கங்காதரன்னு பரமசிவனுடைய பெயரைத் தான் வைத்திருக்கிறோம், அந்த சிவனுக்கே ரெண்டு குழந்தைகள்!"
" அதிலே ஒரு குழந்தை இன்னி வரையிலும் கட்டை பிரம்மசாரி! இன்னொருவனுக்கோ, ரெண்டு மனைவிகள்! ஏன்னு நமக்குத் தெரியுமோ? அதுபோல, எனக்கு இன்னமும் ஏன் குழந்தை தரலைன்னு அவனுக்குத்தான் தெரியும், ......."
" ஏம்மா, கோமதி! நீ என்னம்மா சொல்றே?"
" அப்பா! அவர், எங்க ரெண்டு பேருக்கும் சேர்த்துத் தான் பேசினாரு, எங்களுக்கு குறை ஒண்ணுமில்லே!"
" ரெண்டு பேரும் கோவில், குளமாவது போய் வரக்கூடாதா, குழந்தைவரம் கேட்டு......"
" அப்பா! உங்களைத் தனியா இங்கே விட்டுவிட்டு எங்கே போனாலும், மனசு உங்களைப்பற்றி கவலைப் படுமேதவிர, பிரார்த்தனை செய்யாதுப்பா!"
" சரி, உங்களுக்குப் பதிலா நாங்க வேண்டிண்டு விரதம் இருக்கோம்....."
" வயசுக் காலத்திலே, சாப்பிடற ஒரு கவளச் சோறும் இல்லேன்னா, உடம்பு கெட்டுப் போகும், நாங்க இருக்கோம் விரதம்!"
" அதெப்படி சரிவரும்? கோமதி! நீ சமையல் செய்து வீட்டை கவனிச்சிக்கணும், அவனோ பள்ளிக்கூடத்திலே பாடம் சொல்லித் தரணும், சரி, நடப்பது நடக்கட்டும்."
இந்த உரையாடல், அவ்வப்போது நடக்கும்.....
அவர்களுடைய இறுதிக் காலத்தில், மன வருத்தமுடன் தான், கண் மூடினர்!
காபி வாசனை மூக்கை துளைத்ததும், கங்காதரன் சமையலறைக்குள் நுழைந்து கோமதியிடமிருந்து காபியை பெற்றுக் கொண்டு, இருவரும் ஹாலுக்கு வந்து பேசியவாறே காபி குடித்தனர்.
" கோமதி! என் கடமை கேட்கவேண்டியது, உனக்கு குறை ஒண்ணும் இல்லையே?"