தான் ஒரு பசுவேயாயினும், சபலையும் ஒரு பெண்ணினம் அன்றோ? அவளை மோகித்து, வசிஷ்டனிடம் இச்சித்ததனால் அல்லவா கெளசிகராஜன் கடும் விரதம் அனுஷ்டிக்க விதியுண்டாயிற்று.
விசுவாமித்திரனுக்கு பெண்களை எண்ண எண்ண சினம் பொங்கிற்று.
தேவர்கள் சளைத்து விடாமல் அப்சரஸ¤களை மாறி மாறி ஏவினர். முனிவனம் தன்வயமிழந்து சபித்தல் தொடர்ந்தது. நீண்ட நெடுங்காலமாக தபஸ் இருந்து தான்பெற்ற ஆற்றல்களையெல்லாம் விசுவாமித்திரன் நொடிப் பொழுதுகளில் இழந்தான்.
மீண்டு பூரக ரேசக முதலிய அட்டவாயுக்களையும், ஐம்புலன்களையும் மிகமுயன்று அடக்கி நிர்ச்சிந்தையாக லயிக்க முயன்றான்.
தேவர்கள் மறுபடி மறுபடி இறைவனிடம் ஓடினர்.
இறைவன் மேனகையை அழைத்துவர பூதகணங்களை ஏவினான்.
வனத்தில் வசந்தம் பூத்துக் குலுங்கிற்று. மலர்களின் நறுமணமும், தேறலின் போதையும் தித்திப்பும் எங்கும் நிறைந்தன. காட்டுப்பட்சிகளின் உல்லாசமிருந்த கூவல் ஒலிகளும், வனவிலங்குகளின் வேட்கை ததும்பும் கனைப்பு ஒலிகளும் எங்கும் எதிரொலித்தன.
முனிவனது சிந்தை தடுமாறிற்று. மதன் தருணம் அறிந்து குறிபிசகாமல் கணை தொடுத்தான்.
கூடவே, மின்னல் ஒன்றைப் பற்றியவனாய் மேனகை பூமியில் குதித்தாள்.
அவளது தேகத்தை தழுவிய காற்றைச் சுவாசித்ததுமே, முனிவன் சிலிர்த்தான். மிருக வேட்கையினால் அலைப்புற்றான். முன்னே, ராஜனாயிருந்த காலத்தில் போகசமுத்திரங்களில் சளைக்காது நீந்தித் திளைத்தவனல்லவா?
தாபத்துடன் 'மேனகா' என முனிவன் கூவி அழைத்தான்.