சிறுகதை - ஒரு சுமாரான கணவன் - ரெ.கார்த்திகேசு
"அதோ தெரியிது பாத்தியா, அதுதான் எங்க பினாங்கு!" என்றான் தியாகு.
அன்னம்மாள் விழித்து விழித்துப் பார்த்தாள். அந்த அதிகாலை நேரத்தில் தூரத்தில் அக்கரையில் இருந்து பார்க்கும் போது அது ஒரு மாய லோகமாகத் தெரிந்தது. தலை நிலத்தோடு தொப்புள் கொடியாக இருந்த அந்த நீண்ட பினாங்குப் பாலத்தை அடைந்த போதே அவளுடைய உற்சாகம் கரை புரள ஆரம்பித்து விட்டது. இத்தனை பெரிய பாலம், இத்தனை பெரிய கடல் அவள் பார்த்ததே இல்லை. கப்பல்களும் படகுகளும் பறவைகளுமாக கடல் உயிர்ப்பாக சிலுசிலுப்பாக இருந்தது. இத்தனை மலைகளோடு இத்தனை நீலம் நீலமாய் ஒரு தீவு இருக்குமா!
வேனில் கணவன் தியாகு அவள் தோளைத் தழுவியபடி பக்கத்தில் இருந்தான். இப்போதுதான் கல்யாணம் பண்ணிக்கொண்ட களை இருவர் முகத்திலும் இருந்தது. இரண்டு மூன்று இரவுகள் உபசரிப்பிலும் சரசத்திலும் சரியாகத் தூக்கமில்லாமல் கழிந்த களைப்பும் கூடவே இருந்தது.
"ரொம்ப அளகா இருக்கு உங்க ஊரு" என்றாள்.
"பாத்தியா, பாத்தவொண்ணயே புடிச்சிப் போச்சி தங்கச்சிக்கு?" என்று சிரித்தான் வேனை ஓட்டிக்கொண்டிருந்த குழந்தை. பேர்தான் குழந்தை. ஆள் தொந்தியும் தொப்பையுமாய் கடோ த்கஜன் மாதிரி இருப்பான். தியாகுவுக்கு ரொம்ப நெருக்கமான கூட்டாளி.
இந்தக் குழந்தையினால்தான் நேற்றே பினாங்குக்கு வந்து புதிய வீட்டில் குடிபுக வேண்டியவர்கள் ஒரு நாள் தாமதமாக வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை அவனும் அவன் நண்பர்களும் கொடுத்த கல்யாண விருந்தைச் சாப்பிட்டுவிட்டுத்தான் குவாலா லும்பூரை விட்டுப் போக வேண்டும் என அவன் அடம் பிடித்து விட்டான்.