வீட்டுக்கு வெளியே தடாலென்று சத்தம் கேட்டது. ஏதோ பலகைகள் விழுவது போலவும் சத்தம் கேட்டது. அன்னம்மா படபடப்போடு வந்து எட்டிப் பார்த்தாள். கதவுக்குப் பக்கத்தில் தியாகு சருக்கி விழுந்து கிடந்தான். அவன் தூக்கி வந்த படுக்கைப் பலகைகள் சிதறி விழுந்து கிடந்தன.
"ஐயோ" என்றாள். அவன் சிரித்துக்கொண்டே எழுந்து நின்றான். "ஒண்ணுமில்ல அன்னம்மா. ஒடியாந்தனா, சருக்கி விட்டிருச்சி!"
"ஏன் இந்த அவசரம்?"
"வேலைக்கி நேரமாச்சில்ல!" பலகைகளைப் பொறுக்கி எடுத்து உள்ளே கொண்டு வந்து வைத்தான். அவன் வந்து இரண்டு நிமிடம் கழித்து குழந்தை நாலு சட்டங்களைத் தூக்கிக்கொண்டு மூச்சிறைக்க வந்து சேர்ந்தான்.
"சரி அன்னம்மா. நான் கெளம்பறேன். நீ வீட்ட பூட்டிக்கிட்டு இரு. சாயந்திரம் ஆறு ஏளு மணி போல வந்திருவேன். சரியா? வா வா கொளந்த! ரொம்ப லேட்டாய்ப் போச்சி" அவன் முன்னால் ஓட குழந்தை மூச்சு இன்னும் அடங்காமல் பின்னால் ஓடினான்.
அவன் போன பின் வீடு வெறிச்சென்றிருந்தது. இது வீடா?
மூலைக்கு மூலை ஒட்டடை. சுவரில் முன்பு பசை போட்டு ஒட்டப்பட்டுக் கிழிக்கப் பட்டிருந்த சீன மொழிப் போஸ்டர்கள், படங்களின் தொங்கும் எச்சங்கள். சமையலறை எண்ணெய்ச் சிக்குப் பிடித்துக் கிடந்தது. பின்பக்கம் கம்பித் தடுப்புப் போட்டிருந்தார்கள். எல்லாம் துருப்பிடித்திருந்தன. அதன் பின்னால் அந்த அடுக்கு மாடி சதுரக் கட்டிடத்தின் நடுப்பகுதியான திறந்த வெளி இருந்தது. அங்கிருந்து எட்டிப்பார்த்தால் குப்பைகள் மலையாய்க் குவிந்திருந்தன. தூக்கி எறியப்பட்ட உணவு அழுகும் வீச்சம் வந்து கொண்டிருந்தது.