கொடுத்தனுப்பிய மிளகாய்த்தூள் ஊறுகாய் போத்தல்கள். எல்லாவற்றையும் கொண்டு போய் லிஃப்டுக்கு அருகில் வைத்தார்கள்.
தியாகு லிஃப்டின் பொத்தானை அழுத்தினான். விளக்கு எரியவில்லை. இரண்டு மூன்று முறை அழுத்தினான். ஊஹூம். அப்படியே எதிர்ப்பக்கம் போய் அடுத்த லிஃப்டின் பொத்தானை அழுத்தினான். இல்லை.
"அட, லிஃப்டு வேல செய்யிலியே!" என்றான்.
அன்னம்மா இரண்டு பைகளைக் கையில் பிடித்தவாறே நின்றாள். இரவு முழுக்கத் தூங்காத அலுப்பும் பிரயாணக் களைப்பும் அவள் கண்களில் தெரிந்தன. பக்கத்தில் இருந்த படிகளில் ஆட்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். லிஃப்டின் முன்னால் பிளாஸ்டிக் பைகள் இரைந்து கிடந்தன. ஒரு ஓரத்திலிருந்து மூத்திர வாசம் வந்துகொண்டிருந்தது.
"சரி அப்ப ஏறிட வேண்டியதுதான்!" என்றான் தியாகு.
"சாமாங்க?" என்று கேட்டான் குழந்தை.
"ஆளுக்கொண்ணா தூக்க வேண்டியதுதான்" என்றான்.
"பத்து மாடிக்கா?"
"வேற வழி இல்ல கொளந்த. லிஃப்டு வர்ரதுக்குக் காத்துக்கிட்டு இருக்க முடியாது. சாமாங்கள இங்க வச்சிட்டுப் போகவும் முடியாது. இந்தப் பக்கம் திருட்டு அதிகம். எவனாவது தூக்கிட்டுப் போயிடுவான். நான் மெத்தயத் தூக்கிக்கிறேன். நீ ஒரு சூட்கெச எடுத்துக்க. ஒரு ரெண்டு மாடி போய் அங்க வச்சிட்டு எறங்கி வந்து அடுத்த ஜாமானத் தூக்குவோம். அங்க வச்சிட்டு இன்னும் ரெண்டு மாடி. இப்படியே மாத்தி மாத்திக் கொண்டி சேத்திருவோம்."