எச்சரித்து வைத்திருந்தான் தியாகு. "வெளியூர் டிரிப். ஈப்போ வரிக்கும் போய் திரும்புனும். ராத்திரிக்குத்தான் திரும்ப முடியும். மொதலாளி மொரடன் அன்னம்மா. கண்டிப்பா போயிடணும்."
ஆயர் ஈத்தாம் பகுதியில் நெருப்புப் பெட்டிகளை நிறுத்தி வைத்திருந்தது போல அடுக்கு மாடி வீடுகள் நிறைந்திருந்த பகுதியில் ஒரு கடைசிக் கட்டிடத்திற்கு வழி சொல்லிக்கொண்டு வேனைக் கொண்டு நிறுத்தச் செய்தான் தியாகு.
அந்த அதிகாலை நேரத்தில் அந்தக் கட்டிடத்தைச் சுற்றி சீனர் உணவுக்கடைகள் சுறுசுறுப்பாக வியாபாரம் தொடங்கியிருந்தன. மீயும் பீஹூனும் பன்றிக் கொழுப்பில் பொறியும் வாசனை மிதந்து வந்து கொண்டிருந்தது. இரும்புச் சட்டிகளில் சட்டுவங்கள் படார் படார் என்று தட்டப்படும் ஒசைகள் கேட்டன. கும்பல் கும்பலாகச் சீனர்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
கட்டிட வாசலுக்குப் போகும் வழியெல்லாம் நிறையக் கார்களும் மோட்டார் சைக்கிள்களும் இடத்தை அடைத்துக் கொண்டிருந்தன. ஒருவகையாக நெறிசலுக்கிடையில் நுழை வாயிலில் கொண்டு நிறுத்தினான் குழந்தை.
இறங்கியவுடன் தியாகு அண்ணாந்து அவளுக்குக் காட்டினான். "அதோ பாரு. பத்தாவது மாடி. அந்த செவப்புத் துணி தொங்குது, அதுக்கு அடுத்தாப்பில!" அன்னம்மா கழுத்தை வளைத்து முடிந்தவரை பார்த்தாள். எது பத்தாவது மாடி என்று தெரியவில்லை. "இவ்வளோ ஒயரமா?" என்றாள்.
"பயப்படாத. ரெண்டு லிஃப்டு இருக்குது. ஒரு நிமிஷத்தில ஏறிடலாம்!" என்றான்.
இறங்கி விறுவிறுவென்று சாமான்களை இறக்கினார்கள். இரண்டு சூட் கேஸ்கள், படுக்கைக்கான சட்டங்களும் பலகைகளும்., ஒரு மெத்தை, பிளாஸ்டிக் சாமான்கள் அடங்கிய இரு கைப்பைகள், அன்னம்மாவின் அம்மா