படுத்தியிருக்கிறாள்.
தியாகு நல்லவனாகத் தெரிந்தான். அவளுக்குக் கல்யாணம் பேச ஆரம்பித்த போதே தன் அக்காளுக்கு வாய்த்த கணவனைப் போல எல்லாரையும் அதிகாரம் பண்ணும் முரடனாக இல்லாதவனாக ஒருத்தன் வாய்த்தால் போதும் என்பதே அவள் லட்சியமாக இருந்தது. தியாகு எப்போதும் சிரித்த முகமாக இருந்தான். கனிவாகப் பேசினான். முக்கியமாக அக்காவின் கணவனைப் போல அவன் இடை விடாமல் சிகிரெட் ஊதித் தள்ளுவதில்லை.
கல்யாணப் பேச்சு நடந்து கொண்டிருந்த போது முதல் முதலில் தியாகுவைத் தனியாக அவள் சந்திக்க வாய்ப்புக் கிடைத்த போது அவள் முதலில் கேட்டது அந்தக் கேள்விதான். "சிகிரெட் பிடிப்பிங்களா?"
"சீச்சீ!" என்றான். "அந்தப் பளக்கம் ஜென்மத்துக்கும் கிடயாது"
சந்தோஷமாக இருந்தது.
"தண்ணி குடிப்பிங்கிளா?":
"எப்பவாச்சும். கூட்டாளிங்களோட சந்தோஷமா இருக்கும் போது மாத்ரம்!"
"அத விட்டுடுங்களேன்!"
"சரி அன்னம்மா. கொஞ்சம் கொஞ்சமா விட்டுட்றேன். கொஞ்சம் டைம் குடு" என்றான்.
மீண்டும் சந்தோஷமாக இருந்தது. இத்தனை இணக்கமாக ஒரு ஆண் பேசி அவள் கேட்டதில்லை. அவள் அப்பாவும் அக்காள் புருஷனும் ஒரு நாளும் இப்படிப் பேசியதில்லை. அன்னம்மா அவனை அன்றே காதலிக்கத் தொடங்கி விட்டாள்.