அவளுக்குப் பசி கடுமையாக இருந்தது. ஆனால் என்ன செய்வது? இந்தப் புது இடத்தில் போய் எங்கு எப்படி சாப்பாடு தேடுவது? அதுவும் கீழே பத்து மாடி இறங்கிப் போய்...? அங்கு உள்ள ஜனங்களை நினைத்தாலே பயமாக இருந்தது. இப்படி விட்டுப் போனானே!
நேற்றிரவெல்லாம் கண் விழித்து வந்த அலுப்பு அவளைத் தள்ளிற்று. இந்த வீட்டில் உட்காரக் கூட நாற்காலி இல்லை. பிரித்துத் தாறுமாறாக இறைந்து கிடந்த கட்டில் பலகைகளைப் பார்த்தாள். மெத்தை தனியாக அவன் எறிந்து விட்டுப் போன அதே இடத்தில் கோணலாக ஓவென்று கிடந்தது. புதிய மெத்தை. கல்யாணப் பரிசு. விரிப்பு சூட்கேசில் இருக்கிறது. அதைத் திறந்து எடுக்க உற்சாகம் இல்லை. தலையணை இன்னும் வாங்கவில்லை.
அங்கிருந்த நூற்றுக் கணக்கான புறாக்கூண்டு வீடுகளில் எந்தத் திசை என்று சொல்ல முடியாத ஒரு வீட்டில் சீன மொழியில் ஒரு பெண் கூக்குரலிட்டு ஏசி தப்தப்பென்று எதையோ போட்டு அடித்தாள். தொடர்ந்து குழந்தை ஒன்று வீறிட்டு அழுதது. இன்னும் எங்கோ ஒரு வீட்டிலிருந்து தண்ணீரை இறைத்து இறைத்து ஊற்றும் சத்தம் கேட்டது.
எல்லாச் சத்தங்களும் அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் ஓங்கி உயர்ந்த காங்க்ரீட் சுவர்களுக்குள் மோதி எதிரொலித்துச் சுற்றி வந்தன. ஒலி அடங்கிய பின்னும் ஓவென்ற பின்னொலி சுருண்டு கொண்டிருந்தது.
தனிமையும் பயமும் கரிய மேகங்களாகி அவளை அழுத்தின. நேற்று கலகலப்பான கல்யாணப் பெண்ணாக இருந்து விட்டு இன்று இப்படி ஒண்டியாய்த் திசை தெரியாமல் வாழவா பெற்றோர்கள் இத்தனை தூரம் அனுப்பி வைத்தார்கள்? இப்படியா? பசியாறுவதற்கு என்ன செய்வதென்று தெரியாமல்..., அடுத்த வேளை சாப்பாட்டிற்கு என்ன செய்வதென்று தெரியாமல்... ஒரு மக்கிப் போன வீட்டில், வர்ணம் தேய்ந்து கருப்பாகி என்னைச் சிறைப்படுத்தியிருக்கும் இந்தச் சிமிந்திச் சுவர்களுக்கு மத்தியில்...!