ஒரு ஐந்து நிமிடத்தில் அவன் மெத்தையோடு வந்தான். அவன் உடல் வேர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது. அவனுக்கு நிற்க நேரமில்லை. நின்றால் காற்றுப் போய்விடும் என்பது போல நிற்காமல் ஏறினான். "இன்னும் ஒரு மாடி மேல அன்னம்மா. ஏறு ஏறு" என்று சொல்லிக்கொண்டே அவன் ஏறிப் போனான். ஒரு ரெண்டு நிமிடத்தில் குழந்தை ஒரு சூட்கேசுடன் இளைக்க இளைக்க வந்தான். அன்னம்மாவைப் பார்த்ததும் "பொண கனம் கனக்குது தங்கச்சி இந்தப் பொட்டி" என்றான்.
"மத்தப் பொட்டி எங்க?" என்று கேட்டாள் அன்னம்மா.
"இதோ ரெண்டு மாடிக்குக் கீள இருக்கு! போய் எடுத்தாரணும்" என்றான்.
இரண்டு பேருமாக பத்தாவது மாடிக்கு ஏறினார்கள். தியாகு மெத்தையை ஒரு பக்கத்தில் சாத்தி வைத்து விட்டுக் கம்பிக் கதவில் சாவி போட்டுத் துழாவிக் கொண்டிருந்தான். எல்லாம் கொஞ்சம் துருப்பிடித்துப் போயிருந்தன. பூட்டைக் கொஞ்சம் ஆட்டி அசைத்துத் திருகித்தான் திறக்க வேண்டி இருந்தது. அவன் திறக்கும் வரை அன்னம்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். தன் புது வாழ்கையை அவன் திறப்பதற்குக் காத்திருந்தாள்.
பக்கத்து வீட்டிலிருந்து ஒரு சீனத்தி சத்தம் கேட்டுக் கோபத்தோடு எட்டிப் பார்த்துவிட்டு பட்டென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.
ஒரு வழியாகக் கம்பிக் கதவு திறந்தது. அடுத்ததாகப் பலகைக் கதவின் பூட்டுடன் கொஞ்சம் போராடினான். அது திறந்ததும் "சீக்கிரமா உள்ள போ அன்னம்மா" என்றான்.
"சோத்துக்கால எடுத்து வச்சிப் போ தங்கச்சி" என்றான் குழந்தை.
"ஆமா இவன் ஒருத்தன் சாத்திரம் சொல்ல வந்திட்டான், இந்த அவசரத்தில! எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்ல" என்றான் தியாகு. ஆனால் அவள்