சிறுகதை - பாக்கியம் பிறந்திருக்கிறாள் - ரெ.கார்த்திகேசு
பயத்தோடும் மனப் படபடப்போடும்தான் தூக்கினேன். மெத்து மெத்தென்ற கம்பளித் துணி சுற்றித்தான் கையில் தந்தார்கள். "பாத்து பாத்து..." என்றார் அம்மா. மங்கலான மருத்துவ மனை விளக்கொளியில் ஒரு மயங்கிக் கிடக்கும் ராக்ஷசப் புழுப் போல அது நெளிந்தது. சரியாகப் பிடிக்காவிட்டால் கையிலிருந்து பாதரசம் போல நழுவித் தரையில் கொட்டிச் சிதறிவிடும் போல இருந்தது. எனது வலது உள்ளங் கையில் கம்பளிச் சுற்றையும் ஊடுருவி அதன் உடலின் வெப்பம் வெதுவெதுத்ததை உணர முடிந்தது.
இமையிலும் கன்னங்களிலும் ரத்தம் ஓடுவது இளஞ் சிவப்புச் சாயம் பூசினாற்போல் தெரிந்தது. உடலிலிருந்து பச்சை மண்ணின் மணம். பனிக்குட நீரின் எச்சங்கள் இன்னும் இருந்தன போலும். தலையின் ரோமங்களில் இன்னும் கூட பிசுபிசுப்பு. உதடுகள் விரிந்து கொட்டாவி விட்டது ஓர் உலக அதிசயம் போல் நிகழ்ந்தது. ஒரு சிம்ஃபொனி போல் எங்கள் அனைவரின் வாய்களும் கொஞ்சம் பிளந்து மூடின.
யார் உருவாக்கினார்கள்? நானா? என்னால் எப்படி முடிந்திருக்கும்? களிமண்ணைப் பிடித்து ஒழுங்காக உருண்டையாக்கத் தெரியாத நானா? பென்சிலால் நேராகக் கோடு போடத் தெரியாத நானா?
இவளா? இதோ தலை முடி கலைந்து சோர்ந்து போய் எதையோ பெரிதாகச் சாதித்து விட்ட ஆணவத்தில் மருத்துவ மனைக் கட்டிலில் சாய்ந்து கொண்டு விடாமல் புன்னகைத்துக் கொண்டிருக்கிறாளே, இவளா? எப்படி முடிந்திருக்கும்? இது என்ன சாம்பார் செய்வது போல ஒரு கலையா? தனது வேலைத் தளத்தில் கொம்ப்யூட்டரில் உட்கார்ந்து வண்ண வண்ணமாக கிராஃபிக்ஸ் வரைவாளே, அப்படி வயிற்றுக்குள் வரைந்தாளா?
நாங்கள் இருவரும் சேர்ந்தா? ஒரு காம முயக்கத்தின் விளைவாகவா இப்படி ஓர் அற்புதம்? எந்த இரவில் எந்தக் கணத்தில் நிகழ்ந்திருக்கும்? ஏன் எங்களுக்கு அந்தக் கணத்தின் அருமையும் புனிதமும் புரியாமல் போனது?
"நன்றி வசந்தா!" என்றேன்.
"எதுக்கு?" தெரியாதவள் போல... 'இன்னொரு தடவை விளக்கமாகச் சொல்லேன்' என்ற