"பெண் பிள்ளை!"
தாத்தா கொஞ்சம் யோசித்தார். அப்புறம் "எனக்குக் காட்ட மாட்டியா?" என்றார்.
"காட்டுறேன் தாத்தா, கொஞ்ச நாள் போகட்டும்!" என்றேன்.
ஒரு மாதம் கழிந்தவுடன் தாத்தாவைக் கொண்டு வந்து காட்ட முடிவாயிற்று. "சுத்தமா சவரம் செஞ்சிக்கிட்டு வரச்சொல்லுங்க!" என்று எச்சரிக்கை விடுத்துத்தான் அனுப்பினார் அம்மா.
தாத்தாவை அழைத்து வர நானும் அப்பாவும்தான் போனோம். எங்களைக் கண்டவுடன் "ஏன் பிள்ளையைக் கொண்டு வந்து காட்டல?" என்று கேட்டார். அவருக்கு அந்த அளவுக்கு ஞாபகம் இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
"இதோ உங்களைக் கொண்டு போகத்தான் வந்திருக்கோம் தாத்தா. வாங்க போய்ப் பார்க்கலாம்!" என்றேன்.
தாத்தாவுக்கு சுத்தமாகச் சவரம் செய்துவிட்டு சலவை ஆடைகள் அணிவித்துக் காரில் ஏற்றிக் கொண்டு வந்தோம். வீடு வந்து சேர்ந்ததும் அவரைக் கைப்பிடியாக இறக்கிக் கொண்டு வந்தோம். அம்மா வாசலில் நின்று "வாங்க மாமா" என்று வரவேற்றார்.
"இது யாரு?" என்று தாத்தா கேட்டார்.
"உங்க மருமகள். தெரியிலியா?" என்று அப்பா சிரித்துக் கொண்டே சொல்லி அப்பாவை உட்கார வைத்தார்.
அம்மாவுக்குக் கோபம் வந்திருக்கிறதா என்று பார்த்தேன். அப்படித் தெரியவில்லை. தாத்தா வந்ததில் அம்மா மகிழ்ந்தது போல்தான் காணப் பட்டார். முகத்தில் சிரிப்பு மாறாமல் இருந்ததில் அது தெரிந்தது. "வசந்தா, கொழந்தயக் கொண்டாந்து மாமா மடியில போடும்மா! பெரியவங்க ஆசிர்வதிக்கட்டும்" என்றார். எனக்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.