சிறுகதை - திரும்புதல் - ரெ.கார்த்திகேசு
நெடுஞ்சாலையை விட்டு சுங்கைப் பட்டானிக்குள் நுழையும் சாலையில் டோ ல் சாவடியில் கட்டணம் செலுத்திவிட்டு அவர்களுடைய மெர்சிடிஸ் புறப்பட்டபோதே மூர்க்கமான முன்னேற்றத்தின் அடையாளங்கள் எங்கணும் தெரிந்தன. ஒரு பிரமாண்டமான அனைத்துலக சூப்பர்மார்கெட்டின் உள்ளூர் கிளை; பிஸ்ஸா ஹட்; மேக்டோ னல்ட்ஸ். அனைத்துக் கட்டிடங்கள் முன்னாலும் நெருக்கியடித்துக்கொண்டு நிறுத்திய கார்கள்.
நீலக்கலரில் பளபளப்பு ஓடுகள் இட்ட நவீன வரிசை வீடுகள். ஒவ்வொரு வீட்டின் முன்னும் ஒரு புரோட்டோ ன் வாஜா அல்லது டொயோட்டா; சில வீடுகள் முன்னால் வோல்வோக்களும் பிஎம்டபிள்யூக்களும் கூட. 2020-இல் முன்னேற்ற நாடு என்ற அந்தஸ்த்தை அடைய வேண்டும் என்று பந்தயம் ஓடுகின்ற வளரும் மலேசியாவின் காலணித் தடங்கள்.
தான் இந்த ஊருக்கு ஒரு சொகுசு மெர்சிடிஸில் வந்து நுழைவது ஒரு கால வழு, இட வழுப் போல சுடர் உணர்ந்தாள். கார் ஏறிப் பழகிப் பத்தாண்டுகள், மெர்சிடிஸுக்கு உயர்ந்து ஐந்தாண்டுகள் ஆனாலும் இந்த இடத்தில் அது அந்நியமாகத் தெரிகிறது. இது நான் க்ரீச் க்ரீச்சென்று சத்தமிடும் சைக்கிளோட்டிக்கொண்டும் லொட லொடவென்று ஆடும் பஸ்ஸிலும் பள்ளிக்கூடம் சென்று வந்த ஊர். அப்போது இங்கு சூப்பர் மார்க்கெட்டுகள் இல்லை. கிருஷ்ணன் ஜவுளிக் கடையில்தான் துணி வாங்குவதெல்லாம். அங்கேதான் இளம்பிள்ளை வாதத்தில் கால் ஊனமான சரஸ்வதி அக்கா இருந்தார். அவரிடமிருந்துதான் தமிழ்ப் புத்தகம் இரவல் வாங்கிப் படித்தது.
"என்ன பிறந்த ஊர் வந்தவொண்ணப் பேச்சு மூச்சைக் காணோம்?" என்று அருண் கிண்டலாகக் கேட்டான். அவன் பக்கமாகத் திரும்பிக் காலங்குலம் இதழோரம் பிரித்துச் சிரித்தாள். அவனுக்கு இதைச் சொல்லி விளங்க வைப்பது கடினம் என்று தோன்றியது. திரும்பிப் பின்னிருக்கையில் ஜெய் என்ன செய்கிறான் என்று பார்த்தாள். சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தான். "பார் ஜெய், அம்மாவின் பிறந்த ஊர். உன் தாய் உருவாகிய மண். எந்தையும் தாயும் - தோட்டப்புறத் தொழிலாளர் பரம்பரை ஆனாலும் கூட -- மகிழ்ந்து குலாவி இருந்த மண்" எனச் சொல்லத் தோன்றிற்று. தூங்குபவனை எழுப்ப மனம் வராமல் மீண்டும் வெளியே பார்த்தாள்.