சிறுகதை - வந்திட்டியா ராசு! - ரெ.கார்த்திகேசு
சிலாங்கூர் மேன்சன் வந்து சேர்வதற்குள் சுந்தரராஜுக்கு இரைத்தது. அலுவலகத்தில் ஒன்பதரை மணிக்கு இருக்க வேண்டும் என்பது மானேஜரின் கட்டளை. மணி 10.00 ஆகி விட்டது. பழைய கிள்ளான் சாலையில் காலையிலேயே போக்குவரத்து நெருக்கடி ஆரம்பித்து விடும். இன்று மிக மோசம். சிரம்பான் நெடுஞ்சாலை ஓடும் மேம்பாலத்தின் கீழேயுள்ள சந்திப்பில் வந்து சேர்வதற்கே ஒன்பது ஆனது. ஒன்பதரை மணிக்கு ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவுக்கு வந்து சேர்ந்துவிட்டாலும் காருக்கு பார்க்கிங் இடம் தேட இத்தனை நேரமானது. சரக்குகள் இறக்கும் பெரிய லோரிகள் எல்லா வீதிகளையும் அடைத்துக் கொண்டு கிடந்தன. வளைந்து நெளிந்து மூன்று சுற்றுகள் சுற்றியும் இடம் கிடைக்காமல் ஒரு பார்க்கிங் செய்யக் கூடாத இடத்தில் பார்க் செய்தான். நோட்டீஸ் வந்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது மானேஜரைச் சமாளித்தாக வேண்டும்.
சிலாங்கூர் மேன்சன் கொஞ்சம் பழுப்பேறிக் கிடந்தது. நுழைவாயிலில் கலவையான மணங்கள் வந்தன. மக்கிய மணம். குவாலா லும்பூரின் பரபரப்பான நகர மத்தியில் இருந்தாலும் இது ஒரு நவீன குந்துகுடிசைப் பகுதிதான். கட்டிய காலத்தில் நவீனம். ஆனால் காலம் இந்தக் கட்டிடத்தைக் கண்டு கொள்ளாமல் ஓடிவிட்டது. நகர வாழ்வின் மினுமினுப்புக்கு ஒப்புக் கொடுக்க முடியாமல் ஆனால் விட்டுப் போகவும் முடியாமல் ஒண்டுக் குடித்தனம் நடத்தும் வியாபாரிகளும் மனிதர்களும் அடைந்து கொள்ளும் கட்டிடம்.
லிஃப்டுக்குக் காத்திருக்க முடியாது. உடனே வரும் என்று நம்ப முடியாது. நான்கு மாடிகள்தான் ஏறவேண்டும். சுந்தரராஜு கையில் வைத்திருந்த ஃபைல்கள் அடங்கிய பிரிஃப் கேஸ் கனக்க வேர்க்க வேர்க்க ஓடினான். ஒரு வேளை இன்று மானேஜரும் நெருக்கடியில் மாட்டிக்கொண்டு லேட்டாக வரக்கூடும் என்ற நப்பாசை ஒன்று எழுந்து விரைவில் புதைந்தது. "கேசாபிவிருத்தி மூலிகை அழகு சாதனங்கள்" என்று போர்டு போட்ட கதவைத் தள்ளி உள்ளே சென்றான்.
புதிய நியான் விளக்குகளின் ஒளியில் வரவேற்பறை பளிச்சென்றிருந்தது. மலர் கௌன்டரைத் துடைத்துப் பொருள்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். வண்ண வண்ணமான லேபெல்களில் ஷம்பூக்கள், மேனியை வெளுப்பாக்கும் கிரீம்கள், எண்ணெய்கள். மானேஜரின் கதவு மூடியிருந்தது. "வந்திட்டாரா மலர்?" என்று இரைக்க இரைக்கக் கேட்டான்.