தூளாகும் எனத் தெரிந்தது.
"என்ன சொன்னாரு?" என்று கேட்டாள் மலர். அறைக்குள் பேசுவது எல்லாம் வெளியே கேட்கும். இருந்தாலும் இன்னொரு முறை அவன் வாயால் கேட்டு மகிழ வேண்டும் என்று நினைத்திருப்பாள். அவள் கொடூரம் விரும்பி. அவள் ரகசியமாக வீடியோ டேப்பில் பார்த்த பெண்ணை நிர்வாணமாக்கி ரம்பம் போட்டு அறுக்கும் கதைகளை அவனிடம் சொல்லி மகிழ்ந்திருக்கிறாள்.
"ஆறு டஜன் சரக்கு எடுத்து வைங்க மலர்! கிள்ளானுக்குக் கொண்டு போகணும்!"
"யாரு நீங்களா? ஏன்? டெலிவரி வேன் என்ன ஆச்சு?"
மேலும் கதை பிடுங்கினாள். "எடுத்து வைங்க மலர்! உடனே போகணும்!"
*** *** ***
ஆறு டஜன் புட்டிகள் அடங்கிய பெரிய அட்டைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு லிஃப்டைப் பிடித்து இறங்கி காரை நிறுத்தி வைத்திருந்த இடம் நோக்கி நடந்தான். குவாலா லும்பூரின் உஷ்ணம் தகிக்கத் தொடங்கியிருந்தது. பல்லாயிரம் கார்களும் மோட்டார் சைக்கிள்களும் பஸ்களும் லோரிகளும் இந்த பட்டணத்துக்குச் சூடேற்றிக்கொண்டிருந்தன. மனிதர்கள் வெந்துகொண்டிருந்தார்கள். கைக்குட்டையை எடுத்து முகம் துடைக்கலாம் என்றால் இரண்டு கைகளும் அட்டைப் பெட்டியைத் தாங்கிக்கொண்டிருந்தன. தொப்புளுக்கும் பெட்டிக்கும் இடையில் டை கசங்கியது.
விடாமல் ஊர்ந்து கொண்டிருக்கும் கார்கள் வரிசைக்குள் இடைவெளி கண்டுபிடித்து பெருநடைப் போட்டி வீரனைப் போல நடந்து அவனுடைய காரை அடைந்த போது பன்டார்ராயா போக்குவரத்துக் காவலர் ஒரு சம்மன் எழுதி வைத்துவிட்டு அப்போதுதான் அப்பால் நடந்து கொண்டிருந்தார். போச்சு! இது ஐம்பது வெள்ளியா எழுபது வெள்ளியா தெரியவில்லை. இங்கே கொடுக்கிற எழுநூறு வெள்ளிச் சம்பளத்தில் இருநூற்று ஐம்பது வெள்ளி வாடகைக்குக் கொடுத்துவிட்டுச் சாப்பிடவும் அம்மாவுக்குக் காசு அனுப்பவும்தான் சரியாக இருக்கிறது. சினிமா கூட பார்க்க மனம் வருவதில்லை. போன வாரம் புத்தகக்