கடைக்குப் போய் சில புதுக்கவிதைப் புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்கியது ஒன்றுதான் அவனுடைய உல்லாசச் செலவு.
இங்கு வேலைக்கு இருக்கும் பலபேர் கடையிலேயே தங்கிக் கொள்கிறார்கள். தான் வேலை பார்க்கும் கடையில் தங்கிக் கொள்ள இடம் தந்தார்கள். ஆனால் அங்கு ஏற்கனவே டிரைவரும் இரண்டு டெலிவெரி பையன்களுமாக மூன்று பேர் தங்கியிருக்கிறார்கள். காலைச் சடங்குகளுக்கு பொதுக் குளியலறையை நாட வேண்டும். எங்கும் எப்போதும் தனிமை கிடைக்காது. சக வேலைக்காரர்களுக்கு என்னாளும் ஊர்க்கதை பேசிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க விடமாட்டார்கள்.
புத்தகம் படிக்காமல் ஒரு வாழ்வா? பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமான், வண்ணதாசன், அண்மையில் வெளிவந்த மலாயாத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதுக்கவிதைத் தொகுப்புகள், மலாயாப் பல்கலைக்கழகப் பேரவைக்கதைகள், சிவாவின் "வீடும் விழுதுகளும்", பீர் முகம்மதுவின் "மண்ணும் மனிதர்களும்," மா. இராமையாவின் "அமாவாசை நிலவு" இளவழகுவின் "மீட்சி" ரெ.கா.வின் "மனசுக்குள்" எல்லாவற்றிலும் படித்து முடிக்காத பகுதிகளும் திரும்பப் படிக்க வேண்டிய பகுதிகளும் ஏராளமாக இருந்தன. இதற்காகத்தான் தூரமாக இருந்தாலும் பழைய கிள்ளான் சாலையில் இருநூற்று ஐம்பது வெள்ளியில் தனியறை தேடிக்கொண்டது. ஆனால் அங்கேயும் வீட்டுக்காரர் ஒரே ஒரு நாற்பது வாட் பல்புதான் போட்டிருந்தார். இருட்டில் கண்ணைச் சுருக்கிக் கொண்டு படிக்க வேண்டி இருக்கிறது.
சாவியைப் போட்டு கதவைத் திறந்து அட்டைப் பெட்டியை தனது சீட்டுக்குப் பக்கத்தில் போட்டான். வைப்பரில் செருகி வைக்கப்பட்டிருந்த அபராதக் கடிதத்தை ஆத்திரத்துடன் பிய்த்து எடுத்தான். பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்து ஓட்டப் போகும் நேரத்தில் ஒரு லோரி வந்து அடைத்துக் கொண்டு நின்றது. டிரைவர் இறங்கி ஏதோ சாமானை இறக்கினான்.
ஹோர்னை அடித்து அவனை கிளப்பச் சொல்லலாமா என நினைத்து வேண்டாம் என்ற முடிவு செய்தான். ஹோர்னை அடிப்பதை பலர் தங்களை அவமானப் படுத்துவதாக எடுத்துக் கொள்வார்கள். "நீ பெரிய இவனா?" என்பது போல முறைத்துப் பார்ப்பார்கள். "நிறுத்தக் கூடாத இடத்தில் நிறுத்தி விட்டுப் பெரிய கேள்வியா?" என்று வாதம் செய்வார்கள். வாதம்