சிறுகதை - இன்னொரு தடவை - ரெ.கார்த்திகேசு
இரண்டு கைகளையும் ஊன்றி எழுந்து தள்ளாடி நின்றான் பாஸ்கரன். முட்டிகள் கொஞ்சம் வளைந்தாற்போல் நின்றன. முழுதாக நிமிரவில்லை. பிருஷ்டத்தைத் தட்டி ஒட்டியிருந்த மண்ணை அகற்றினான். போக்கெட்டுக்குள் கையை விட்டு சிகரட்டுப் பாக்கெட்டை எடுத்தான். பாக்கெட்டில் ஒரே கடைசி சிகரெட் இருந்தது. எடுத்து வாயில் வைத்துக் கொண்டான். காலிப் பாக்கெட் சாலையில் விழுந்தது. லைட்டரைத் தேடினான். எந்தப் போக்கெட்டில்? கோட்டுப் போக்கெட்? சிலுவார் போக்கெட்? தட்டித் தட்டித் தேடினான். சிலுவாரின் பின்புறம்? கோட்டுக்குள் கைவிட்டு சட்டைப் பையைத் துழாவினான். இல்லை.
"டேம்மிட்" சபித்தான். சிகிரெட் உதட்டிலேயே ஊசலாடிக் கொண்டிருந்தது.
நடக்கலாமா? முடியுமா? எந்தத் திசையில்? முன்னும் பின்னும் பார்த்தான். இரண்டு பக்கமும் சாலை நீண்டிருந்தது. இரண்டு பக்கமும் மங்கலான தெரு விளக்குகள் இருந்தன. எதிர்ப்புறத்தில் ஒரு பூங்கா இருந்தது. உயர்ந்த மரங்களுக்கிடையில் இருள் அடர்ந்திருந்தது. இப்போது விளக்கை நோக்கிப் போவதை விட இருட்டை நோக்கிப் போவதுதான் விருப்பமாக இருந்தது.
அந்த வீடமைப்புப் பகுதியின் கடைவீடுகள் தொகுதியில் நவீன அலுவலகமாக மாற்றம் செய்யப்பட்டிருந்த ஒரு கட்டடத்தின் முன்னால் அவன் நின்றிருந்தான். அப்போதுதான் வெளியே தூக்கி எறியப் பட்டிருந்தான். விழுந்து எழுந்ததனால்தான் பிருஷ்டத்திலிருந்து மண் தட்ட வேண்டியிருந்தது.
எதிர்ப்புற பூங்காவை நோக்கி நடந்தான். சாலை அசைந்தது. ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து ஆடி உடலை சமன் செய்து நடந்தான். சாலை நீண்டு கொண்டே போவது போல... கடக்க நேரமாயிற்று. அடுத்த பக்கம் வந்து கொஞ்ச நேரம் நின்றான். அப்போதுதான் வந்த வடூயில் எங்கோ சிகரெட் வாயிலிருந்து விழுந்து விட்டது தெரிந்தது.
"டேம்மிட்!" போய்த் தேடலாமா? எங்கே விழுந்தது? இருட்டில் தெரியவில்லை. கண்களில் நீரூறிக் கலங்கியிருந்ததில் எதையும் குவிந்து பார்க்க முடியவில்லை. இனித் திரும்பப் போய் தேடமுடியாது. வலுவில்லை. போனால் போகட்டும் இனித் தேவையில்லை. எத்தனையோ போய் விட்டது! யாராரோ பிடுங்கிக் கொண்டார்கள்! இதுவும் போகட்டும்.