முற்றினால்... சில பேர் வண்டிக்குள் மண்வெட்டிக் கணைகளை வைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறான். அமைதியாகக் காத்திருந்து போவதே நல்லது என உட்கார்ந்து விட்டான்.
இயலாமையும் எரிச்சலும் ஏமாற்றங்களும் நிறைந்த அந்தக் காத்திருக்கும் கணத்தில்தான் பளீரென அந்த எண்ணம் வந்தது. இந்த வேலையையும் இந்த சனியன் பிடித்த நகரையும் விட்டுவிட்டு பினாங்குக்கே போய்விட்டால் என்ன? இந்த வருடம் ஆசிரியர் பயிற்சிக்கு மனுப்போட்டாலும் கிடைக்கும். பயிற்சிக்காலத்தை முடித்துக் கொண்டு எங்காவது அவர்கள் கொடுக்கும் போஸ்டிங்கை ஏற்றுக்கொண்டு - அது ஒரு பொட்டைக்காடாக இருந்தாலும் நல்லதுதான் - போய் அமைதியாக இருந்துவிடலாம். வேலையைப் பார்க்கலாம். இலக்கியம் படிப்பதற்கு யாரும் தடையாக இருக்க மாட்டார்கள். யார் கண்டார்கள்? மணியம் வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்திலேயே வேலை கிடைத்தாலும் கிடைக்கும். அந்த நினைவே ஆனந்தமாக இருந்தது.
ஆனால் அது ஒரு பெரிய அவமானம் என்றும் தோன்றியது. இங்கு நான் வர்த்தக உலகத்தில் வெல்ல வந்தேன். இந்த ஒரு முசுடு மேனஜருக்காக எல்லாவற்றையும் விட்டு ஓடுவது என்பது வெட்கக்கேடு. ஊர் சிரிக்கும். ஊர் என்றால் யார்? உறவினர்கள்தான். அம்மாவும் அக்காவும்தான். அவர்கள் சிரிப்பை நினைக்க பயமாகத்தான் இருக்கிறது. அவர்கள் சிரிப்பு ஊர் முழுதும் திரண்டு சிரிப்பது மாதிரிதான். மணியம் சிரிப்பானோ? அடுத்த முறை அவனைப் பார்க்கும்போது கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.
லோரிக்காரன் நகர்ந்தான். இவனை ஒரு ஏளனப் பார்வை பார்த்துவிட்டுப் போனான். இங்கும்தான் எல்லோரும் சிரிக்கிறார்கள். மானேஜர் வாய் நாறத் திட்டிவிட்டு அவன் திரும்பியதும் அவனுடைய பயங்கொள்ளி முகத்தைப் பார்த்துச் சிரிக்கிறார். அவன் அறைக்குள் திட்டு வாங்கும்போது மலர் வெளியிலிருந்தவாறு எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு சிரிக்கிறாள். நான் இந்த நகரில் நடக்கும்போதும் ஒட்டுக்கடைகளில் சாப்பிடும்போதும் வீட்டுக்குள் நுழையும்போதும் எல்லோரின் உதடுகளிலும் ஏளனச்சிரிப்பு இருக்கிறது. நான் இந்த பட்டினத்திற்குப் பொருத்தமானவனில்லை எனபது போல! இவன் ஏன் இங்கு வந்தான் என்பது போல!
மீண்டும் எப்படியாவது இந்த இடத்தை விட்டுத் தொலைந்து பினாங்குக்குப்