நான் கவனிச்சிக்கிட்டே இருப்பேன்."
ஆசாமி பல ஊக்குவிப்பு கருத்தரங்கங்களுக்குப் போய்வந்த ஆளாக இருக்க வேண்டும். ஒரு மனிதனிடம் பேசுகிறோமே என்ற எண்ணம் சிறிதும் இன்றி வியாபார வெற்றியையே முதன்மைப்படுத்தும் பேச்சாக அது இருந்தது.
மணியத்திடம் தொலைபேசியில் பேசும்போது இதைச் சொன்னான். "உங்க மேலாளர் ரொம்பத் திறமையானவர் ராசு! வியாபாரத்துக்கு ஏற்ற குணங்கள் உள்ள மனிதர். அரம் போல கூர்மையான புத்தியுள்ள மனிதர்" என்றான் மணியம்.
"என்ன மணியம்! நான் என்னோட கவலைகளைச் சொன்னா நீ அவரைப் புகழ ஆரம்பிச்சிட்டியே!"
"நான் என்ன புகழ்றது? வள்ளுவரே புகழ்ந்திருக்காரு! தேடிப்பாரேன்!"
அன்று இரவு தேடிப் பார்த்தான். பினாங்கிலிருந்து சுமந்து வந்த புத்தகங்கள் கொஞ்சம்தான் என்றாலும் அதில் ஒரு திருக்குறள் இருந்தது. "மரம் போலும் மக்கட் பண்பில்லாதவர்" என்று பார்த்துத் தன் மன நிலையை அப்படியே வள்ளுவர் பிரதிபலித்திருப்பதைக் கண்டபோது மனசுக்கு ரொம்பவும் ஆறுதலாக இருந்தது.
இப்படித்தான் மணியம். எப்போதும் ஒரு இலக்கிய வாக்கு அவன் நுனிநாவில் நிற்கும். இப்போதே போய் மணியத்திடம் பேச வேண்டும் போல் ஒரு ஆசை எழுந்தது.
"என்ன அப்படியே உக்கார்ந்திட்டிங்க? போய் பாத்திருங்க! இல்லன்னா நாந்தான் சொல்லலன்னு என் மேல பாய்வாங்க!" என்று மலர் உசுப்பினாள். எழுந்து உள்ளே போனான்.
*** *** ***
"கிள்ளான்ல சரக்கு ஆறு டஜன் கேட்டிருந்தாங்களாமில்ல, ஏன் நேத்து கொண்டி குடுக்கல?"
முகத்தில் முட்டையை உடைத்து ஊத்தினால் பொரிந்துவிடும் சூடு இருந்தது.