இப்ப உள்ள நிலமையில ஆளே தேவையில்லைன்னு சொல்லிடுவாங்க. போ சுந்தர்ராஜு! சம்பளமும் கொஞ்சம் கூடப் போட்டுத் தருவாங்க. குவாலா லும்புர்ல செலவு அதிகம்தான், என்ன பண்றது? சிக்கனமா இருந்தா பொழைச்சு முன்னுக்கு வரலாம்!" என்று முதுகைத் தட்டி அனுப்பி வைத்தார்.
வயதான தாய் இருக்கிறார். தான்தான் காப்பாற்ற வேண்டும். கணவனை இழந்த அக்காள் குளுகோர் மார்க்கெட் பக்கத்தில் ஒட்டுக் கடை போட்டு வடை சுட்டு விற்கிறார். நிச்சயமில்லாத வருமானம். ஆகவே தன்னை நம்பித்தான் இருந்தார்கள்.
மணியத்திடம்தான் சொல்லி அழுதான். "பரவாயில்ல போ ராசு! மாற்றம்கிறது வாழ்கையில முக்கியமான ஒண்ணு. அதப்பாத்து பயப்படக் கூடாது. "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல"ன்னு சொல்லியிருக்காங்கள்ள!"
எதற்கும் ஒரு இலக்கிய எடுத்துக்காட்டு காண்பிப்பான். தமிழ்ப் பள்ளியில் படித்து தமிழ் இலக்கியத்தால் ஈர்க்கப்பட்டு அதில் முற்றாகத்த் தோய்ந்து போனவன். தனக்கும் அந்தப் பித்தை ஊட்டிவிட்டவன் அவன்தான். தன்னோடு ஒன்றாகத்தான் எஸ்டிபிஎம் தேர்வு எழுதினான். இருவருக்கும் சுமாரான தேர்வுதான். பல்கலைக் கழகம் போகும் அளவுக்கு அது இருக்கவில்லை. மணியம் தமிழாசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியர் ஆகிவிட்டான். பினாங்கிலேயே ஒரு பள்ளியில் அவனுக்கு போஸ்டிங் கிடைத்து அங்கேயே ஆனந்தமாகத் தங்கி விட்டான்.
தனக்குத்தான் ஆசிரியர் வேலையில் நம்பிக்கை இல்லை. மீண்டும் எஸ்டிபிஎம் எழுதிப் பல்கலைக் கழகத்துக்குப் போயே ஆவது என உறுதி கொண்டு படித்துக் கொண்டிருந்த வேளையில் வர்த்தகத் துறைக்குப் போனால் ஆயிரம் ஆயிரமாகச் சம்பாதிக்கலாம் எனப் பல தன்முனைப்புக் கருத்தரங்கங்களில் கேட்ட பிரச்சாரப் பேச்சுக்கள் திசை மாற்றிவிட்டன.
கொஞ்ச காலம் இன்சுரன்சு, கொஞ்சகாலம் பொருள்கள் நேரடி விற்பனை என மாற்றி மாற்றிச் செய்து ஒன்றும் சரியாக வராமல் "கேசாபிவிருத்தி மூலிகை அழகு சாதனங்கள்" பினாங்கில் ஏக தடபுடலாக ஆரம்பிக்கப் பட்ட போது அதில் சேர்ந்துவிட்டான். அப்போது தீவிரமாக விளம்பரம் செய்தார்கள். மார்க்கெட்டில் அவர்கள் கொடி பறந்தது. ஒரு வருடத்தில் போட்டி மிகுந்துவிட்டது. பினாங்கு வியாபாரம் எதிர்பார்த்த சூடு பிடிக்கவில்லை. அதனால்தான்