"இருக்காரு. உங்களைக் கேட்டாரு. வந்தவுடனே வந்து பார்க்கச் சொன்னாரு" என்றாள். அவள் முகத்தில் இருந்த கடுகடுப்பு மானேஜரின் மனநிலையைச் சொல்லாமல் சொல்லியது.
பிரிஃப் கேஸைத் தனது மேஜையில் வைத்துவிட்டு டையைத் தளர்த்திக் கழுத்தைச் சுற்றிப் படர்ந்திருந்த வியர்வையைத் துடைத்தான். டை ஒரு சனியன். இந்த வியாபார டம்பத்துக்கு இதையும் கட்டிக் கொண்டு ஆடவேண்டி இருக்கிறது. கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டுதான் போக வேண்டும். தாமதமாக வந்ததற்குக் காரணம் தயாரிக்க வேண்டும்.
பினாங்குக் கிளை அலுவலகத்திலிருந்து இந்தத் தலை நகர் அலுவலகத்துக்கு மாற்றல் செய்யப்பட்டு வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. ஊரே இன்னும் சரிவரப் பிடிபடவில்லை. பினாங்கு சொந்த ஊர். பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் அங்கேதான். இதமான ஊர். ஓர் அன்னையைப் போல. கடல் உண்டு, காற்று உண்டு, மலை உண்டு, நல்ல மனிதர்கள் உண்டு. முக்கியமாக இதமான மனித உணர்வுகள் கொண்ட, விடாமல் இலக்கியம் பேசுகின்ற நண்பன் மணியம் உண்டு. சந்திக்கும் நேரத்திலெல்லாம் "வந்திட்டியா ராசு!" என்று வாய் நிறைய வரவேற்பான். எல்லாவற்றையும் விட்டு இந்த முரட்டு ஊருக்கு வரக் கொஞ்சமும் விருப்பம் இல்லை.
மாற்ற வேண்டாமென பினாங்கு அலுவலக மேலாளரிடம் கெஞ்சிப் பார்த்தாகி விட்டது. "மன்னிச்சிக்க சுந்தரராஜு! வியாபாரம் ரொம்ப மந்தமாப் போச்சி. போட்டி அதிகம் ஆயிடிச்சி. நீதான் பாக்கிறியே, ஆளுக்காளு இப்ப மூலிகை ஷாம்பூவும் எண்ணெயும் விக்க ஆரம்பிசிட்டாங்க! நம்பாளுங்க பளக்கமே அதுதானே! ஆப்பக் கட ஒருத்தர் போட்டா பக்கத்தில தோசக்கட போட்டிடுவாங்க! ரேடியோவில ஒரு அர மணி நேரத்த வெலக்கி வாங்கிட்டு இல்லாத பொய்யெல்லாம் அவுத்துவுட்டுட்டு வாங்க ஆள் பிடிக்கிறாங்க!"
எல்லாம் இவர்கள் ஆரம்பித்து வைத்ததுதான். இப்போது அந்த விளையாட்டை மற்றவர்கள் இன்னும் வெற்றிகரமாக ஆடுகிறார்கள்.
"குவால லும்பூர் வட்டாரத்திலதான் வியாபாரம் நல்லா இருக்காம். அங்கதான் இனி மார்க்கெட்டிங் அதிகரிக்கணும்னு கம்பெனியில முடிவு பண்ணிட்டாங்க. நீ போகலைன்னா