வெய்யில் ஏறிக் கொண்டிருந்தது. காரில் பொருத்தியிருந்த குளிர் சாதனக் கருவி புராதனமானது. இந்த வெயிலில் அதற்கும் சூடேறிவிட்டிருந்தது. புடுவில் மாபெரும் சாலை வட்டம் வந்தது. இதைச் சுற்ற வேண்டும். இது தலை நகர அசுரனின் கோயில் கருவறை. இதை வலம் வர வேண்டும். ஆனால் இங்கு பல கோர தேவதைகளும் சுற்றுகின்றன. இவற்றினிடையே பயபக்தியாக இவற்றின் பிருஷ்டங்களுக்கிடையே முகம் நுழைத்து வணங்கி, பல்லிளித்து, சுற்றி தன் வழியைப் பிடிக்க வேண்டும்.
எல்லாக் கோர தேவதைகளும் சிரிக்கிறார்கள். அடேடே யாரிவன் கத்துக்குட்டி! யார் இவனை இந்தப் பெரு நகருக்குள் விட்டார்கள்? ஹா ஹா ஹா இவன் அசைவதைப் பார்! நடுங்குவதைப் பார்! ஹே ஹே ஹே! புடு ராயா பஸ் நிலையம் முழுவதும் அவர்கள் கோரச் சிரிப்பு எதிரொலித்தது.
கிள்ளான் பஸ் நிலையம். புகுந்தால் ஜாலான் துன் எச்.எஸ்.லீ. அங்கு பழைய ஹை ஸ்த்ரீட் மகா மாரியம்மன் சிரித்துக் கொண்டிருந்தாள்.
சுற்றிக் கொண்டே இருந்தான். எப்படியோ, எந்தத் தெய்வமோ, வழி விட்டது. மாரியம்மனாகத்தான் இருக்க வேண்டும். மெர்டேக்கா வட்டம். விஸ்மா துன் சம்பந்தன். ஜாலான் சையட் புத்ராவில் இருந்தான். இனி நேராகப் போனால் பி.ஜே. போகலாம். ஓரத்து லேனில் இருந்தான். பக்கத்தில் மிருகங்கள் சீறிப் போகின்றன. பின்னால் ஒரு கரிய யானை "ஏன் இவ்வளவு மெதுவாகப் போகிறாய்?" எனப் பிளிறித் துரத்தியது.
ஏன் இவைகளோடு தன் வாழ வேண்டும்? ஏன் இவைகளோடு நான் போராட வேண்டும்? பினாங்கு போய்விட வேண்டும் எப்படியும் பிழைக்கலாம். மணியத்தின் பக்கத்தில் நிம்மதியாக இருக்கலாம். போகத்தான் வேண்டும். இந்த கிள்ளான் வேலை முடிந்ததும். இந்தா உன் வேலையை நீயே வைத்துக்கொள். வானொலியிலும் பத்திரிக்கைகளிலும் பொய்யும் புரட்டும் சொல்லி உன் வியாபாரத்தை நடத்திக் கொள். உன்னிடம் வேலை செய்யும் ஏஜண்டுகளை பயனீட்டாளர்கள்போல் நடிக்க வைத்து ஏமாற்றிக் கொள். கூந்தலில் தைலம் தடவுவதால் சொரி, சிரங்கு, காசநோய், புற்றுநோய் அனைத்தும் நீங்கும் எனச் சொல்லிக் கொள். காசுக்காக எல்லாம் செய்யலாம். "பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லை" அந்த அரைக்குறள் உங்களுக்கெல்லாம் போதும்.