கேட்டதில்லை. கேட்டது எதனையும் அவன் மறுத்ததில்லை. ஆகவே இந்தப் பீடிகை அவனை ஆச்சரியப் படுத்தி இருக்க வேண்டும்.
"ஜெய்க்கு இந்த இடம் பிடிச்சுப் போச்சி! இங்க இருக்க விருப்பப் பட்றான்"
"தெரியும் சுடர். ஆனா நாளைக்கே நாம் குவாலலும்பூர் போயாகணுமே! ரெண்டு நாள் விஸ்மா புத்ராவில பிரிஃபிங் இருக்கே! எப்படி இன்னொரு நாள் இருக்க முடியும்?"
"அருண், நான் சொல்றது இன்னொரு நாளைக்கு இல்ல; சில வருஷங்களுக்கு"
அப்போதுதான் அதிர்ந்து கேட்டான்: "விளையாட்றியா சுடர்?"
"இல்ல அருண். மூத்தவன் சிங்கப்பூர்ல இருந்து படிக்கட்டும். ஜெய் இங்க இருக்கட்டுமே!"
"இங்கயா? இந்தப் பட்டிக் காட்டிலயா? ஏன்?"
"இது பட்டிக் காடு இல்ல அருண். இது என் அப்பாவின் வீடு. தாய் மண். கலாச்சார மண். இதில இருந்துதான் நாம் உருவானோம். பாங்கோக்கிலும் சிங்கப்பூரிலும் உள்ள காங்க்ரீட்டில் இல்ல!"
"என்ன உளர்ர சுடர்? இங்கே அவன் என்ன படிப்பான்? என்ன கத்துக்குவான்?"
"இங்கே அவன் பக்கத்தில் சரஸ்வதி பள்ளிக்கூடத்தில தமிழ் படிப்பான். அப்பாக்கிட்ட இருந்து பண்பாடு கத்துக்குவான். அண்ணன் குழந்தைகள் கிட்ட இருந்து ஒட்டி உறவாப் பழகிற கலாச்சாரம் கத்துக்குவான். குடும்பம்னா என்னன்னு கத்துக்குவான். மண்ணை நேசிப்பான். மனுஷனா இருப்பான்."
"அவனுக்கு உயர்வான ஆங்கிலக் கல்வியக் கொடுக்க அரசாங்கம் செலவு பண்ணத் தயாரா இருக்கு. என்னை விடப் பெரிய மனுஷனா அவன ஆக்கணும்னு கனவு கண்டுகிட்டிருக்கேன் சுடர்!"