அப்புறம் பாங்கோக்கிற்கு மாற்றினார்கள். அங்குதான் முதல் பையன் கணேஷ் பிறந்தான். இரண்டாண்டுகள் கழித்து ஜெய் பிறந்தான். அங்கிருந்து லண்டனுக்கு அருணை முதல் நிலைச் செயலாளராக மாற்றினார்கள். மூன்றாண்டுகள் அங்கிருந்த பின் இப்போது ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாட்டுக்கு அவனை முதல் முறையாகத் தூதராக நியமித்திருக்கிறார்கள். ஓர் இந்திய வமிசாவளி வந்த குடிமகனுக்கு ஒரு மலாய் இஸ்லாமிய நாடு கொடுத்துள்ள இந்த அங்கீகாரம் அவர்கள் இருவரையும் பூரிக்க வைத்தாலும்...
"ஆப்பிரிக்காவுக்கா?" என்று அயர்ந்தாள் சுடர்.
"அப்படித்தான் சுடர். முதலில் இந்த மாதிரி சின்ன தூரமான நாடுகள்ளதான் போடுவாங்க! அப்புறம்தான் ஐரோப்பிய நாடுகள்ள போடுவாங்க! எவ்வளவு பெரிய கௌரவம் இது! வேணான்னு சொல்ல முடியுமா?" என்றான்.
"அப்ப புள்ளைங்க படிப்பு?" மூத்தவன் அப்போதுதான் லண்டனில் படிக்க ஆரம்பித்திருந்தான். ஜெய் பாலர் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தான்.
"யோசிச்சுட்டேன். ரெண்டு பேரையும் சிங்கப்பூர்லெ என் அண்ணன் வீட்டில விட்டிடுவோம். அங்க அவங்க இண்டர்நேஷனல் ஸ்கூலுக்குப் போவாங்க. எல்லாச் செலவையும் அரசாங்கம் கொடுக்கும்."
அவளுக்கு இதயத்தைப் பிழிந்தது. ஒரே சமயத்தில் இரண்டு பிள்ளைகளையும் பிரிந்திருப்பதா? என்ன மாதிரி வாழ்க்கை இது? சொகுசுக்குக் குறைவில்லை. ஆனால் வேர்கள் பிடிக்காத வாழ்க்கை. இரண்டாண்டுகள் இங்கே, இரண்டாண்டுகள் அங்கே... ஒரு கலாச்சாரத்தின் முகம் பிடிபடுவதற்குள் இன்னொரு கலாச்சாரத்தின் மத்தியில்... ஒரு மொழியின் நெளிவு சுளிவுகள் நாவில் வரத் தொடங்கும்போது இன்னொரு மொழிக்கு...
ஆனால் அருண் அந்த வாழ்க்கையைப் பெரிதும் அநுபவித்தான். அவன் குடும்பத்தில் எந்தக் கலாச்சார பாரங்களும் இல்லை. தமிழறியாத குடும்பம். தூதரக வாழ்வின் அயராத, திரும்பத் திரும்ப வரும் விருந்துகளும் சடங்குகளும் அவளை அலுக்க வைத்தபோது அவன் அடுத்ததிற்கு ஆர்வத்தோடு காத்திருந்தான். டிசி எண்ணுள்ள காரும் சீருடை அணிந்த