அவள் தோக்கியோவிலும் பாங்காக்கிலும் லண்டனிலும் தன் அப்பார்ட்மன்டில் இருந்து காலையில் துயிலெழும் நாட்களில் அம்மாவின் தாளிப்பின் வாசம் வருவதாகக் கற்பனை செய்து கொண்டிருக்கிறாள்.
அப்பா பூஜையில் உட்கார்ந்திருப்பார். அவளும் அண்ணனும் பள்ளிக்கூடம் போகக் குளித்துவிட்டு வர அவர்களை உட்காரவைத்து ஏதாகிலும் ஒரு தேவாரம் சொல்லாமல் அவர்களை விட மாட்டார்.
"பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடை மேல்...."
தேவாரங்களின் அர்த்தங்கள் விளங்கிக் கொண்டது பின்னால் தமிழ்ப் பள்ளியில். அங்குதான் கல்வி தொடங்கியது. தமிழ் வாத்தியார் பெயர் சுப்பிரமணியம். "சுடர்க்கொடி" என்ற பெயரை "சுடர்" என்று முதன் முதலில் மாற்றி அழைத்தவர் அவர்தான். தட்டுத் தடுமாறிய கல்விதான். மாணவர்கள் வேறு போக்கில்லாததால் அங்கு வந்து சேர்ந்தவர்கள் போல்தான் இருந்தார்கள். ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடுதான் சொல்லிக் கொடுத்தார்கள். எத்தனை சொல்லியும் உரிக்க முடியாத பாறைகளாக இருந்த சிலரை ரோத்தானால் வெளுத்திருக்கிறார்கள். வாத்தியாரிடம் அடி வாங்கிய செய்தியை வீட்டில் போய்ச் சொல்ல முடியாது. சொன்னால் வாத்தியாரைக் கோபப் படுத்திய குற்றத்திற்கு மேலும் தோல் உரியும். இந்த மொக்கை மாணவர்களை அடித்துத் துவைப்பது ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உகந்த பொழுது பொக்காக இருந்தது.
ஆனால் சுடருக்குப் படிப்பு வந்தது. "சூட்டிகையாக இருக்கிறாள்" என வாத்தியார் மெச்சிக் கொள்வார்.
அண்ணன் தமிழ் ஆரம்பப் பள்ளியை முடித்து மலாய் இடைநிலைப் பள்ளிக்குப் போய் அந்தப் புதிய இடத்தில் ஒன்றிப்போக முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். மலாய் மாணவர்கள் சீன மாணவர்களின் பகடிகளைப் பொறுக்க முடியாமல் ஓரிரு ஆண்டுகளில் அப்பாவுக்குத் துணையாக வீட்டில் தங்கிவிட்டார்.
இந்த நிலையில் தன் முறை வந்ததும் அவளும் நடுக்கத்துடன்தான் மலாய் இடைநிலைப் பள்ளிக்குச் சென்றாள். ஆனால் பிடித்துவிட்டது. பிற இன மாணவர்களின் கொடுமை இருந்தது.