ரத்தத்தைப் பார்த்து அழுதான்.
ஆனால் மற்ற மிருகங்கள் எல்லாம் அவனைப் பூரிக்கச் செய்தன. தொட்டும் தட்டியும் விளையாண்டான். அப்பாவின் நாய்கள் அவனைக் கீழே தள்ளி முகம் நக்கின. கையால் தலநயை மூடிக் கொண்டு கால்களை உதைத்துக்கொண்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்தான். அவனை இழுத்து வந்து குளிப்பாட்டப் பெரும் பாடாய்ப் போனது. அப்போதுதான் அப்படிக் கேட்டான்:
"அம்மா, கேன் ஐ ஸ்டே இன் தாத்தாஸ் ஹௌஸ்?"
*** *** ***
எப்படி வாழ்க்கை இந்த அளவுக்கு மாறியது என்பது நினைக்கும்போது சுடருக்கு வியப்பாகத்தான் இருந்தது. இடைநிலைப் பள்ளயில் படித்து முடிந்ததும் அவளுக்கு மலாயாப் பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்தது. ஆங்கிலம் சிறப்புப் பாடமாக எடுத்து கல்விப் போதனையில் டிப்ளோமாவும் வாங்கினாள். அவள் குடும்பத்தில் அவர்கள் பரம்பரையில் முதல் பட்டதாரி. அங்குதான் அருணைச் சந்தித்தாள். பொருளாதாரத் துறையில் இரண்டாம் ஆண்டு மாணவனாக இருந்தான் அருண் என்கிற அருணாச்சலம். அழகன். தன்னைப்போல எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவன் எனத் தெரிந்தது. தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவனாக இருந்தான். ஆனால் நன்றாக நகைச்சுவையாகத் தமிழ் பேசினான். பேச்சு வளர்ந்து நேசமாகி ஏதோ ஒரு ரசாயனத்தில் அது காதலும் ஆனது. அப்பாவின் ஆசியில் கல்யாணத்தில் பூத்தது.
அவனுக்கு மலேசிய வெளிநாட்டுச் சேவையில் வேலை கிடைத்தது. ஓராண்டு விஸ்மா புத்ராவில் இருந்து பயிற்சி முடிந்தவுடன் அவனைத் தோக்கியோவில் மலேசியத் தூதரகத்தில் துணைச் செயலாளராகப் போட்டார்கள். தோக்கியோவின் நவீன தொழில் நுணுக்கச் சூழலில் சுத்தமான கிருமி நாசினி தெளித்த வாழ்வு அப்பாவின் வீட்டிலிருந்து முற்றிலும் வேறு பட்டிருந்தது. உலகில் வேறு விதமான வாழ்க்கைகளும் இருக்கின்றன என அவளுக்குப் புலனாயிற்று. தூதரகத்தில் மலாய்ச் சீனக் குடும்பங்களோடு அணுக்கமாகப் பழகக் கற்றுக் கொண்டாள். கொஞ்சம் ஜப்பானிய மொழியும் பேசப் பழகினாள்.