"உயர்வான மனுஷனா வர்ரதுக்குப் பல வழிகள் இருக்கு அருண். மொதல்ல அப்பா அவனுக்குக் கலாச்சார அடித்தளம் போடட்டும். அப்புறம் நீங்க அவனை உங்க அச்சில் வார்க்கக் காலம் இருக்கும்!" அவள் குரல் கொஞ்சம் உடைந்தது போல இருந்தது.
"என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்படி உணர்ச்சி வசப்பட்ற?"
கொஞ்சமாக அழுதாள். "மன்னிச்சிக்குங்க அருண். நான் உங்களை அடைஞ்சி நீங்கள் கொடுத்த அன்பான வாழ்க்கையை அடைஞ்சி ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கேன். ஆனா இங்க திரும்பி வந்து அப்பாவோட வாழ்க்கைய மறுபடி புதுசா பாக்கும்போதுதான் எதையெல்லாம் பறிகொடுத்து இதை அடைஞ்சிருக்கோம்னு தெரியிது. நாமாவது இந்த மண் வாசனைகள அனுபவிச்சிட்டு ஒரு சொகுசு வாழ்க்கைக்குப் போனோம். ஆனா நம்ப பிள்ளைகளுக்கு இந்த வாழ்க்கை கொஞ்சமும் கொடுத்து வைக்காமப் போயிடுமோன்னு நெனைக்கிறபோது எனக்குப் பொறுக்கலிங்க! அவனே இன்னைக்கு இங்கே இருக்கட்டுமான்னு கேட்டபோது என்னால முடியாதுன்னு சொல்ல மனம் வரல!"
"சின்னப் பிள்ளை சுடர்! அவனுக்கு என்ன தெரியும்?"
"அவனுக்குத் தெரியுதுங்க! நமக்குத்தான் தெரியாமப் போச்சி!"
விம்மல் பெரிதாக வந்துவிட்டது. அவன் பேசாமல் இருந்தான். அழ விட்டான். முதுகைத் தடவிக் கொடுத்தான். "சரி சரி! ஏதோ பைத்தியம் மாதிரி பேசற! படு! காலையில பேசிக்குவோம்!" என்றான்.
ஜெய்க்குப் போர்த்திவிட்டு அருணுக்கு முதுகைக் காட்டியவாறு ஒருக்களித்துப் படுத்தாள் சுடர். அழுகையின் தீவிரம் தணிந்தவுடன் ஏதோ பெரிய குற்றம் செய்துவிட்டோ ம் என்ற உணர்வு நெஞ்சை அடைத்தது. ஒரு கணம் பித்தம் தலைக்கேறி இருந்த போது யோசிக்காமல் அருணை ஆழமாகப் புண் படுத்திவிட்டோ ம் எனத் தோன்றியது.
இரவு கனமாக இருந்தது. அப்பாவின் ஆசைப் புறாக்கள் மட்டும் குர் குர்ரென இதமாக இரவுப் பேச்சுக்கள் பேசிக் கொண்டிருந்தன. அருணும் தூங்காமல் இருந்தான் எனத் தெரிந்தது. நீண்ட