அவர்களின் இரண்டு குழந்தைகளும் இப்படிக் கிராமச் சூழ்நிலையில் அப்பாவோடு இருக்க ஒப்புக்கொண்டார்கள்? எப்படி அவர்களின் குழந்தைகள் சரளமாகத் தமிழும் தேவையானால் அளவோடு ஆங்கிலமும் பேசிக் குதூகலமாக இருக்கிறார்கள்?
நவீன பொருளாதாரத்தால் அளக்க முடியாத வாழ்க்கை ரகசியங்கள் பல இருக்கின்றன என சுடர் நினைத்துக் கொண்டாள்.
அப்பாவுக்கு முன்னேற்ற எண்ணம் இல்லை என்று சொல்ல முடியுமா? இந்த வீடும் அதன் சுற்றுப் புறமும் இவ்வளவு நேர்த்தியாக இருக்கும்போது...? இருக்கிறது; ஆனால் அந்த முன்னேற்றத்தின் அச்சு வேறு மாதிரியானது.
தன் மனசின் ஒரு மூலையில் இந்த வாழ்க்கை பற்றிய ஏக்கம் ஒன்று குமிழாக எழுந்து ஊதிப்பெருத்து பொக்கென்று உடைந்து மன அறைகளின் எல்லாச் சுவர்களிலும் வழிவதை அவள் உணர முடிந்தது.
அப்பாவின் அப்பா தோட்டப் பாட்டாளியாகத்தான் இந்த நாட்டுக்கு வந்தார். இதே சுங்கைப் பட்டானிக்குப் பக்கத்தில் ஒரு தோட்டத்தில் ஆங்கிலேய காலனித்துவவாதிகளுக்குக் கீழே காடழித்துக் கொட்டைபோட்டு ரப்பர் மரம் வளர்த்து, கொத்தடிமை வாழ்க்கையின் துன்பத்தைத் தணிக்கக் குடிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு ஒரு நாள் கள்ளச் சாரயத்துக்குப் பலியாகிப் போனார்.
அவரது எச்சங்கள் இரண்டும் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்குப் போயின. மூத்தது அப்பனின் அச்சில் இருந்தது. முரடாக இருந்தது. 8 வயதில் சுருட்டுப் பிடித்தது. 10 வயதில் சொக்கறா வேலைக்குப் போய் சம்பாரித்தது. சம்பாரிக்கும் திமிரில் குடித்தது. பின்னொரு நாள் குடிபோதையில் நடந்து வந்தபோது லோரியில் அடிபட்டுச் செத்தது.
இளையதுதான் அப்பா. அப்பாவின் கதையை இலேசில் அவரிடமிருந்து பறிக்க முடியாது. மிகக் கொஞ்சமாகத்தான் பேசுவார். தன் சாதனைகளை மட்டுப் படுத்திப் பேசித்தான் பழக்கம். தவணை முறையில் அவர் பிள்ளைகளுக்குச் சொல்லியது:
அப்பா காலையில் தமிழ்ப் பள்ளிக்கும் மத்தியானம் அப்பனுக்குத் துணையாக மரம் வெட்டவும்