அப்பாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தேன். அவர் தனக்குள் சிரித்துக் கொண்டது போலிருந்தது. முதல் தடவையாக தந்தையான எனக்கு இருந்த படபடப்பும் மகிழ்ச்சியும் அவருக்குச் சிரிப்பை உண்டாக்கின போலும். அவர் என்னோடு மூன்று மக்களைப் பார்த்தவர். பேரன் பேர்த்தி கூட இதற்கு முன் என் அண்ணன் மூலம் பார்த்தாகி விட்டது.
குழந்தையைக் கையில் ஏந்திய அனுபவம் மனசில் இன்னும் ஈரமாக இருந்தது. இது சந்ததியின் தொடர்ச்சி. புதிய அத்தியாயம். நான் எழுதியிருக்கிறேன். என் அப்பாவின் தொடர்ச்சியாக. என் பாட்டன் பூட்டனின் தொடர்ச்சியாக. ஆதி மனிதனின் தொடர்ச்சியாக. ஆதிக் குரங்கின் தொடர்ச்சியாக. ஆதிகாலத்தில் விண்வெளிக் கதிரியக்கத்தில் கொதித்துக் கிடந்த விஷக் கூழிலிருந்து உருவான முதல் மரபணுக்களின் இடையறாத் தொடரின் ஒரு சங்கிலிக் கண்ணாக இவள். 'ஆதி' என்பது எவ்வளவு பொருத்தமான பெயர்? இத்தனை சாதாரணமாக அடிபட்டுப் போனதே!
திடீரென்று நினைவு வந்து அப்பாவைப் பார்த்துக் கேட்டேன்: "ஏன் அப்பா, குழந்தயத் தாத்தாவுக்குக் கொண்டி காட்ட வேணாம்?"
"ஆமா கொண்டி காட்டத்தான் வேணும். பாக்க ஆசப் படுவாங்கதான். எதுக்கும் அம்மாவையும் உன் பெண்டாட்டியையும் கேட்டுக்க!" என்றார்.
அப்பா ரொம்ப மாறிவிட்டார். அவருக்குள் இருந்த வெப்பம் முற்றாக வெளியேறி விட்டது. எதைக் கேட்டாலும் "எதுக்கும் உங்க அம்மாவை ஒரு வார்த்தை கேட்டுக்க" என்பதே பாட்டாகப் போய்விட்டது.
அப்பா ஒரு காலத்தில் வீறுடன் இருந்தார். பெரியார் இயக்கத்தில் இருந்து ஜாதிய எதிர்ப்புப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார். தமிழர் சங்கம் அமைத்து இந்தியர் என்ற மந்தைக்குள் தான் அடங்கியவனில்லை என்று காட்டி இருக்கிறார். எங்களுக்கெல்லாம் பெயர் வைக்க நாள் நட்சத்திரம் பார்க்கவில்லை.
அவருடைய அப்பா - என் தாத்தா- அவர் காலத்தில் சிங்கமாக இருந்தவர். ஐஎன்ஏயில் இருந்திருக்கிறார். நேதாஜியுடன் பிடித்த படம் இன்னமும் வைத்திருக்கிறார். கொஞ்சமாகச்