வசந்தா கொஞ்சம் விழிக்க அம்மா சொல்லிக் கொடுத்தார்: "சரின்னு சொல்லு!" சும்மாதான். தாத்தாவைத் தமாஷ் பண்ண. புஷ்பலதா பாக்கியம் ஆக முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
"சரி தாத்தா!" என்றாள் வசந்தா.
***
தாத்தாவை மீண்டும் கொண்டு அவரது அறையில் சேர்த்தோம். அப்பாவைப் பார்த்து "பிள்ளைக்குக் கொடுக்கணும்னு ஒரு சாமான் எடுத்து வச்சேன். அப்ப கொண்டார மறந்து போச்சு. கொஞ்சம் இரு!" என்று அலமாரிக்குள் சென்று துழாவித் தேடி ஒரு தடித்த கவர்க்கூட்டை எடுத்துக் கொடுத்தார்.
"என்ன அப்பா இது?" பிரித்துப் பார்த்த போது 100 வெள்ளி நோட்டுக்களாக ஆயிரக் கணக்கில் பணம் இருந்தது.
"ஏது அப்பா இவ்வளவு பணம்? ஏன் குடுக்கிறீங்க?"
"நீ குடுத்த பணம்தான். சேத்து வச்சிருக்கேன். பிள்ளைக்குக் குடு! நல்லா வளத்து எடு!" என்றார்.
நான் சொன்னேன்: "வேணாம் தாத்தா! எங்கிட்ட பணம் இருக்கு! பிள்ளய வளத்து எடுக்க அது போதும்!" என்றேன்.
"போதுமா? எவ்வளவு பணம் போதும்?" என்று கேட்டார். எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
"பரவாயில்லா தாத்தா. உங்க செலவுக்கு வச்சிக்கிங்க!" என்றேன்.
"எனக்கு என்ன செலவு? எல்லாந்தான் உங்க அப்பா கொடுக்கிறாரே! எனக்கு இனி செலவு இல்ல. பாக்கியத்துக்குக் கொடு!" கடைசி வரை திரும்ப வாங்கிக் கொள்ளவில்லை.