செல்லரித்துப் போன கருப்பு வெள்ளைப் புகைப் படத்தில் மூன்றாவது வரிசையில் தொப்பியே பெரிதும் தெரியுமாறு நிற்பார். காந்தி இயக்கத்தில் இருந்து கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டுக் கைத்தடியினால் அடிவாங்கி இருக்கிறார்.
அவற்றாலெல்லாம் முறிக்க முடியாத என் முன்னோரின் தமிழ் ஆத்மாவை எங்கள் குடும்பம் ஏழைமை நிலையிலிருந்து மத்திய தரப் பொருளாதார வர்க்கத்துக்கு எறிய பின், புதிய சமூகச் சூழ்நிலை முறியடித்து விட்டது. போராட்டங்கள் இல்லாத சுகமான வாழ்கையில் நானும் என் சகோதரர்களும் தின்பதும் திரிவதுமாக ஆடு மாடுகள் போல ஆகிவிட்டோ ம் என எனக்கு அடிக்கடி தோன்றும். சம்பாதிப்பதும் சந்தோஷிப்பதுமே எங்கள் வாழ்கையில் முதன்மை ஆகிவிட்டது போலத் தோன்றியது.
நானும் என் அண்ணனும் தங்கையும் புதிய மலேசிய நாடு வழங்கிய வாய்ப்புக்களைப் பயன் படுத்திக் கொண்டு படிப்பில் உயர்ந்து விட்டோ ம். பட்டதாரிகளாக ஆகிப் பெரிய உத்தியோகங்கள் பெற்றோம். அண்ணன் தேசிய இடை நிலைப் பள்ளியில் அறிவியில் பிரிவில் சேர்ந்து புதிய புதிய மலாய் ஆங்கில அறிவியல் தொடர்களை வீட்டுக்குக் கொண்டு வர ஆரம்பித்த போதே அப்பாவின் ஆளுமை சரியத் தொடங்கிற்று. நானும் தங்கையும் தொடர்ந்து தேசியப் பள்ளிகளுக்குப் போக, வீட்டுக்குள் எங்களுக்குள் ஆங்கிலம் பேச ஆரம்பிக்க அம்மாவும் விரைந்து ஆங்கிலம் கற்றுக் கொண்டார். இலக்கணத்தை முற்றாகப் புறக்கணித்துக் கருத்தைப் புரிய வைப்பதையே முதன்மையாகக் கொண்ட வேடிக்கை மொழி அவருடைய ஆங்கிலம். நாங்கள் சிரித்துக் கேலி பண்ணினாலும் எங்களோடு சேர்ந்து சிரித்துக் கலந்து கொண்டார். அப்பாதான் அதில் கலந்துகொள்ள முடியாமலும் விருப்பமில்லாமலும் தன்னைக் கொஞ்சம் தனிப் படுத்திக் கொண்டார்.
எங்கள் குடும்பம் அன்பான குடும்பம்தான். யாருக்கும் எந்தக் குறையும் இல்லை. அண்ணன் ஒரு பொறியியலாளர். தங்கை ஒரு தேசிய ஆரம்பப் பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியை. வெவ்வேறு ஊர்களில் குடும்பதோடு இருக்கிறார்கள்.
நான் ஒரு பொருளகத்தில் நிதித் துறை இயக்குனர். பெற்றோருடன் தங்கி விட்டேன். அப்பா என்னை மட்டும் உடன் வைத்துக் கொண்டு தமிழும் பண்பாடும் சொல்லிக் கொடுத்தார். என்ன காரணத்தாலோ எனக்கும் அதில் பிடிப்பு வந்தது. என் மேற்கல்வியோடு இவற்றையும் விடாமல் பற்றிக் கொண்டேன்.