இல்லை. அவர்களைத் அடக்கித் தடுக்க முடியவில்லை.
தாத்தா, பாட்டியை இழந்த பின் எங்களோடுதான் இருந்தார். ஆனால் வயதாகும் காலத்தில் தன் நினைவுகள் தப்பித் தப்பிப் போய்த் தான் பிறருக்குத் தொல்லையாகி வருவதைத் தெரிந்து கொண்டவுடன் தான் தனியாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். அவரே ஒரு நண்பர் மூலம் ஒரு முதியோர் ஆசிரமத்தைக் கண்டு பிடித்துப் போய்ச் சேர்ந்து விட்டார். அப்பா வேண்டாம் என்று தடுத்துப் பார்த்து அலுத்துப் போய் விட்டு விட்டார்.
இப்போது தாத்தா சுகமாகத்தான் இருகிறார். நினைவு மட்டும் போகும் வரும். அவர் இருக்குமிடத்தில் அவரை இதமாகவும் கனிவாகவும் கவனித்துக் கொண்டார்கள். அப்பாவும் அவருக்கான எல்லாச் செலவுகளையும் கட்டிக் கையிலும் பணம் கொடுத்து வந்தார். அடிக்கடி போய்ப் பார்ப்பதும் உண்டுதான். அம்மாவுக்கும் வசந்தாவுக்கும்தான் தாத்தாவைப் பிடிக்காது. கடந்த சில ஆண்டுகளாகவே அவர்களைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் முகங்களை மறந்து விட்டு "யாரு இந்தப் பொம்பிளைங்க?" என்று அவர் கேட்பது அவர்கள் இருவருக்கும் பெரும் அவமானமாக இருந்தது.
இப்போது இவள். இப்போதைக்கு என் மனதில் 'ஆதி' தான். இன்னும் ஒரிரு நாட்களில் பேர் தெரிந்து விடும். நல்ல குடும்பத்தில்தான் வந்து பிறந்திருக்கிறாள். அன்பாகவும் பண்பாகவும் வளர்க்கப் படுவாள். ஆனால் காலச் சுழல் இவளை எந்தக் கரைக்குக் கொண்டு சேர்க்கும் என்பது யாருக்குத் தெரியும்! ஆனால் அதெல்லாம் பின்னால். இப்போது அவளை அந்த முது கிழவருக்குக் காட்ட வேண்டும். "பார் தாத்தா! உன் பூட்டப் பிள்ளை. உன் வம்சத்தின் புதிய தளிர். பார். கைகளில் ஏந்திக் கொள்!"
***
புஷ்பலதாவுக்கு - அப்படித்தான் ஜோசியர் பெயர் வைத்துக் கொடுத்திருந்தார் - பூவைப் பனியினால் போர்த்தது போல மெல்லிய பட்டில் ஒரு சட்டை வாங்கிப் போட்டிருந்தோம். 'புஷ்' என்றும் 'புஷு' என்றும் அவளைக் கூப்பிட்டோ ம். பால் வாசனையும் மூத்திர மல வாசனைகளும் அதன் பின்னர் புஸ்ஸென்ற பவுடர் வாசனையுமாக எப்போதும் ஏதாவதொரு வாசனையுடனேயே இருந்தாள். மனைவியும் பெரும் பாலும் அதே வாசனைகளுடன்தான் இருந்தாள்.