பாசாங்கு.
"இந்த அதியசத்துக்குத்தான். எப்படி செஞ்ச?"
"போங்க!" என்று சிரித்துக்கொண்டே கோபித்துக்கொண்டாள். "என்ன பேர் வைக்கலாம், சொல்லுங்க...!" என்றாள் தொடர்ந்து, எனக்கும் இந்தச் சாதனையில் சிறு பங்கு கொடுப்பவள் போல.
"ஆதி!" என்றேன்.
"ஆதியா? அது என்ன பேர்?"
"நமக்கு முதல் குழந்தை இல்லையா, அதனாலதான். அதோட வள்ளுவர் முதல் குறள்ளியே சொன்னாரில்ல, 'ஆதி பகவன்' அப்படின்னு...."
"ஆமா, இப்பிடித்தான் பட்டிக்காடு மாதிரி பேர் வைங்க! எல்லாரும் சிரிப்பாங்க...!" என்றார் அம்மா.
"ஆமாங்க, அப்புறம் ஸ்கூலுக்குப் போம்போது எல்லாரும் கேலி பண்ணுவாங்க! நல்ல மோடர்னா பேர் வைக்கணும்!" என்றாள் வசந்தா.
"இங்க கொண்டா!" என்று குழந்தையை என் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டார் அம்மா. மேலும் என் கையில் இருந்தால் இன்னும் என்னென்ன கூத்துப் பண்ணிவிடுவேனோ என்று பயப்பட்டார் போலும்.
"நாளைக்கு நம்ப ஜோசியர் கிருஷ்ணனைப் போய் பார்க்கணும். அவரு நக்ஷத்திரம் கணிச்சி முதல் எழுத்து எடுத்துக் குடுப்பார். அப்புறம்தான் பேர்!" அம்மா கண்டிப்பாகச் சொன்னார். உண்மைதான். ஜோசியர் மிகவும் நவீனமான ஜோசியர். நக்ஷத்திரம் எல்லாம் இப்போது கணிப்பது கம்ப்யூட்டரில்தான். அப்பாயின்ட்மன்ட் வைத்துதான் போய்ப் பார்க்க முடியும். பேச்சு விளக்கமெல்லாம் இங்கிலீஷில்தான்.