அவளைத் தூக்கி வைத்துக் கொள்ள போட்டி போட்டுக் கொண்டோ ம். அப்பா அப்படியாக முந்திக் கொள்வதில்லை. மடியில் கொண்டு போட்டால் கொஞ்சுவார். எனக்கு வீட்டில் இருக்கும் போதெல்லாம் அவளைத் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்றே தோன்றும். "சும்மா சும்மா தூக்காதிங்க! உடம்பு சூடு ரொம்ப ஆகாது" என்று வசந்தா என்னைக் கண்டிப்பாள்.
தாத்தாவுக்கு அவளைக் கொண்டு காட்ட வேண்டும் என்னும் ஆசை நிறை வேறாமல் இருந்தது. அம்மாதான் தள்ளி வைத்தார். "இப்ப என்ன அவசரம்? பிள்ளைக்கு கொஞ்சம் தெம்பு வரட்டும். அப்புறம் காட்டலாம்" என்றார். "கெழம் இருக்கிற எடத்தில என்னென்ன நோய் நொடிங்க இருக்கோ! பச்சை பிள்ளைக்குத் தொத்திக்கிச்சினா?" என்று மறைவில் அவர் பேசியதைக் கேட்டேன்.
எனக்கும் கூட கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஆனால் இத்தனை மில்லியன் ஆண்டுகளாக மனித இனம் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்திருப்பது இதை எல்லாம் வென்றுதானே என்ற நம்பிக்கையும் இருந்தது. ஏதோ இந்தப் பிள்ளைதான் மிக அதிசயமான பிள்ளை என்பதுபோல் அம்மா பேசுகிறார்.
ஆனால் தாத்தாவைப் பார்த்து புஷ்பலதா பிறந்திருக்கும் செய்தியைத் தெரிவித்தோம். தாத்தா வெறுமை நிறைந்த கண்களுடன் மிகவும் உன்னிப்பாகக் கேட்டுவிட்டு அப்பாவைப் பார்த்து "உனக்கு பிள்ளை பிறந்திருக்கா?" என்று கேட்டார்.
"இல்லப்பா, இவனுக்கு, கதிரேசனுக்கு. முதல் பிள்ளை!" என்றார் அப்பா.
என்னைப் பார்த்து "எங்க பிள்ளை?" என்று கேட்டார்.
"வீட்டில இருக்கா தாத்தா!" என்றேன்.
"என்ன பிள்ளை?"