(Reading time: 16 - 31 minutes)
சிறுகதை - பாக்கியம் பிறந்திருக்கிறாள் - ரெ.கார்த்திகேசு
சிறுகதை - பாக்கியம் பிறந்திருக்கிறாள் - ரெ.கார்த்திகேசு

வசந்தா குழந்தையை ஏந்தி வந்து தாத்தாவின் மடியில் போட்டாள். தாத்தா கைகளைக் கூட்டிக் கொஞ்சம் அணைத்த படியே பிடித்துக் கொண்டார். நான் பக்கத்திலேயே உட்கார்ந்து குழந்தை தவறி விடாமல் இருக்கப் பார்த்துக் கொண்டேன்.

   

புஷ்பலதா முஷ்டிகளை மடக்கிக் கொண்டு தாத்தாவின் முகத்தை வைத்த கண் வாங்காமல் முறைத்துப் பார்த்தாள். தாத்தாவும் கொஞ்சமும் புன்னகை இல்லாத முகத்தோடு தன் தடித்த கண்ணாடிகள் ஊடே அவளைத் திருப்பி முறைத்தது போல் இருந்தது.

   

"குழந்தய ஆசிர்வதிங்க தாத்தா!" என்றாள் வசந்தா.

   

"நல்லா இருக்கட்டும்!" என்றார். தனது விரல்களால் குழந்தையின் கையைப் பிடித்துப் பார்த்தார். திரை விழுந்த தோல் சுருங்கிய ஜீவன் வற்றிய கருத்த விரல்கள் பச்சை ரத்தம் ஓடும் சிவந்த தளிர் விரல்களைப் பற்றியிருந்தன. அந்த முரண்பாட்டின் பொருள் என்ன என்று நான் எனக்குள் தேடிக் கொண்டிருந்தேன்.

   

புஷ்பலதா சட்டென்று முஷ்டியை விரித்துத் தாத்தாவின் ஒரு விரலைப் பற்றிக் கொண்டாள். தாத்தா முதன் முறையாகப் புன்னகை செய்தார். புஷ்பலதா பதிலுக்குச் சிரித்தாள். எங்கள் எல்லார் உதடுகளும் மீண்டும் ஒரு சிம்ஃபொனியின் வாத்தியங்கள் போல விரிந்தன.

   

"என் பாக்கியம், என் பாக்கியம்" என்றார் தாத்தா. என் குழந்தை தாத்தாவுக்குப் பெரிய பாக்கியமாகத் தெரிவது எனக்குப் பெருமையாக இருந்தது.

   

"பாக்கியம்ங்கிறது எங்க அம்மா பேரு!" என்றார் அப்பா. எனக்கும் ஞாபகம் வந்து "ஓ" என்றேன்.

   

தாத்தா கொஞ்ச நேரம் இருந்து நாங்கள் வற்புறுத்தக் காப்பியும் இனிப்புப் பலகாரங்களும் சாப்பிட்டார். ஒரு முறை வசந்தாவை உற்றுப் பார்த்தபோது அவளாக முந்திக் கொண்டு சொன்னாள்: "யாருன்னு பாக்கிறிங்களா தாத்தா! நாந்தான் பிள்ளயப் பெத்தவ!"

   

"எனக்குத் தெரியும். பிள்ளைக்கு பாக்கியம்னு பேர் வை!" என்றார்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.