குழந்தை கொஞ்சம் யோசித்து விட்டு "சரி" என்று ஒரு சூட்கேசைத் தூக்கித் தோள்மீது வைத்துக் கொண்டான்.
அன்னம்மாவைக் கொஞ்சம் பரிதாபத்தோடு பார்த்தான் தியாகு. "அன்னம்மா, நீ உன்னால முடிஞ்சத தூக்கிக்கிட்டு நேரா பத்தாவது மாடிக்குப் போய் அங்க நில்லு. நாங்க வந்து சேந்தர்ரோம்" என்றான்.
அன்னம்மா இரண்டு பைகளுடனும் படிக்கட்டை நெருங்கி ஏறத் தொடங்கினாள். சேலையின் அடிப்பாகம் காலில் சிக்கியது. ஒரு கையால் லேசாகத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு படியாக ஏறினாள்.
மூன்றாவது மாடி ஏறுவதற்குள் அன்னம்மாவுக்கு இளைத்தது. வராந்தாவில் நின்று கொஞ்சம் வேடிக்கை பார்த்தாள். கீழே சீனர் ஒட்டுக் கடைகளிலிருந்து மீ பிரட்டும் புகை மண்டலம் எழுந்து கொண்டிருந்தது. சலசலவென பேச்சுச் சத்தமும் மோட்டார் சைக்கிள்களின் சீற்றமும் கேட்டது. ஒட்டுக்கடைகளின் படுதாக் கூரைகளின் மேல் சில மரங்களின் கிளைகள் நிழல் கொடுத்து அணைத்தவாறு படர்ந்திருந்தன.
மெத்தையை முதுகில் சுமந்தவாறு மூசு மூசு என்று இளைத்துக் கொண்டு தியாகு அங்கு வந்து சேர்ந்தான். மெத்தையை இறக்கி வைத்தான். "நீ போய்ட்டே இரு. நான் போயி இன்னொரு சூட்கேசக் கொண்டாந்து இங்க வச்சிட்றேன்" என்று இறங்கி ஓடினான்.
அவனைக் கொஞ்ச நேரம் இரக்கமாகப் பார்த்து விட்டு மீண்டும் ஏறினாள் அன்னம்மா. எந்த மாடியிலும் எண்கள் போட்டிருக்கவில்லை. உத்தேசமாக வைத்துக்கொண்டு ஏறினாள். அந்த குறுகிய படிகளில் ஆட்கள் அவசரமாக இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தார்கள். அவர்களுக்குப் பயந்து ஒதுங்கி ஒதுங்கி நின்று ஏறினாள். ஒன்பது மாடி என்று கணக்கு வந்தவுடன் நின்று அவன் வந்து சேரக் காத்திருந்தாள்.