"நான் இன்னும் வீட்ட சரியா கூடப் பாக்கில. எங்க நேரம்? ஒரு கூட்டாளிதான் சொன்னான் பாரேன். மிந்தி சீனங்கதான் சேவாவுக்கு இருந்தாங்களாம். இப்ப ஒரு ஆறு மாசமா ஆளு இல்ல. கோசமாதான் கெடந்திச்சாம். சேவா சீப்பா குடுத்தாங்க! இதுக்கு மேல நம்பளுக்குத் தாங்காது அன்னம்மா!" என்று கொஞ்சம் வெட்கத்தோடு சொல்லியிருந்தான்.
"அது போதும். சமாளிச்சிக்கலாம்!" என்று அப்போது சொன்னாள். இப்போது பார்க்கும்போது அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.
இவ்வளவு மோசமாகவா? ஆணி அடித்து அடித்துச் சுவர்களில் அம்மை வார்த்திருந்தது. சுவர்கள் இருண்டிருந்தன. வர்ணம் அடித்து இருபது வருடமாவது இருக்க வேண்டும். ஓர் அறைக்கு ஒரு 40 வாட் பல்பு தொங்கிக் கொண்டிருந்தது. அதன் ஒயர் முழுக்க ஒட்டடை. குளியலறையிலிருந்து மக்கிப்போன மூத்திர மணம் வந்து கொண்டிருந்தது. பிளஷ் வேலை செய்யவில்லை. இங்கு எப்படி வாழ்வது?
எப்படிப்பட்ட மனிதன் இந்தக் கணவன்? ஒரு லோரி டிரைவராக வருமளவுக்குதான் அவனுக்கு தெரவிசு. அவ்வளவுக்குத்தான் சம்பாத்தியம். ஒரு நல்ல வீடு பார்த்துத் தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை. கூட்டாளி சொன்னான் என்றும் மலிவாக இருக்கிறது என்றும் கண்ணை மூடிக்கொண்டு பிடித்து விட்டான். கூட்டாளிகள் நிறைய வைத்துக் கொண்டிருக்கிறான். அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆடுகிறான்.
நிதானமாகக் காரியம் செய்யத் தெரியவில்லை. பேய் போல வண்டி ஓட்டுகிறான். படபடவென்று ஒடுகிறான். அந்த ஓட்டத்தில் சருக்கி விழுகிறான். வெகுளித் தனமாகச் சிரிக்கிறான். வேலைக்கு ஓடும் அவசரத்தில் புதிதாகக் கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்திருக்கும் மனைவியிடம் அன்பாகச் சொல்லிக் கொள்ளக்கூட நேரம் இல்லை. மனைவி ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. இவனா என்னை வாழ்நாளெல்லாம் கட்டிக் காக்கப் போகிறான்?