சுவரில் சரிந்து உட்கார்ந்தாள். ரவிக்கையில் அழுக்கு அப்பிக் கொள்வதைப் பொருட்படுத்தத் தோன்றவில்லை. கண்களிலிருந்து மளமளவென்று கண்ணீர் வந்தது. தொண்டையிலிருந்து விக்கல் வந்தது. புடவைத் தலைப்பால் கண்களைப் பொத்திக் கொண்டு கேவி அழுதாள்.
யாரோ அவள் வீட்டுக் கம்பிக் கேட்டைப் பிடித்து உலுக்கினார்கள். முகத்தைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். ஓர் இந்தியப் பையன் நின்று கொண்டிருந்தான்.
"என்ன வேணும்?" என்றாள்.
"ரொட்டிச் சானாய்" என்றான்.
எழுந்து நின்று "என்ன?" என்றாள் விளங்காமல்.
"கதவத் தொறங்க, அந்த அண்ணன் ரொட்டிச் சானாய் கொண்டி குடுக்கச் சொன்னாரு!" என்றான்.
"அண்ணனா? எந்த அண்ணன்?"
"உங்க புருஷன்னு சொன்னாரு!"
சாவியைத் தேடிக் கம்பிக் கதவைத் திறந்து விட்டாள். அவன் ரொட்டிச் சானாய்ப் பொட்டலம், பிளாஸ்டிக்கில் முடிக்கப்பட்டு ஸ்ட்ரா வைக்கப்பட்டிருந்த சூடான தேனீர், ஒரு பெரிய போத்தல் குடி தண்ணீர் ஆகியவற்றைக் கீழே வைத்தான்.
" நீ யாரு?" என்று கேட்டாள்.