இருக்க! அவன்தான் உனக்கு எதிர்காலத்துக்கு வழி சொல்லிக் குடுப்பான்!"
"இல்லம்மா, அப்படிச் சொல்லாதம்மா! இன்னையோட அவனை விட்டுட்றம்மா! இனிமே அவனோட சேரமாட்டேம்மா. சத்தியம்மா, சத்தியம், சத்தியம்!" அவள் கையைப் பிடித்து உள்ளங்கையில் அடித்தான்.
"மூணு சத்தியமாப்பா? காப்பாத்த அவசியமில்லாதபோது மூணு என்ன, நூறு கூடப் பண்ணலாம். எனக்கு நம்பிக்கையில்லப்பா!" என்றாள்.
என்ன செய்ய நினைத்துவிட்டாள் இந்த அம்மா! செத்தே போவது என்று முடிவு செய்து விட்டாளா? தன்னையும் தன் தங்கையையும் அநாதைகள் ஆக்கிவிடுவதென்று முடிவு செய்து விட்டாளா? அந்த அளவுக்கா என் செயல் அவளைத் தைத்து விட்டது?
முத்தையாவுக்கு மனம் முற்றாக உடைந்து போனது. கதறினான். "வேணாம்மா? இப்படிச் செய்யாத! எங்கள விட்டுப் போகாத. நான் என்ன செய்யணும் சொல்லு? வேணுன்னா என்ன கட்டி வச்சி அடி! எனக்குச் சூடு வை. நான் பண்ணின குத்தத்துக்கு நீ ஏன் இப்படி தண்டனை அனுபவிக்கிற?"
"ஏன்னா ஒனக்கு எந்தத் தண்டனை கொடுத்தாலும் பிரயோஜனம் இல்லாமப் போகுது. அதினால ஒன்ன சரியா திருத்தி வளக்க முடியாததுக்கு எனக்கே நான் தண்டனை கொடுத்துக்கிறேன். அவ்வளவுதான்!"
"வேணாம்மா! நான் எல்லத்தையும் இன்னைக்கோட விட்டிட்றேன். நீ எந்திரிம்மா. சாப்பிடும்மா!" அழுதழுது சொன்னான்.
அவள் லேசாக எழுந்து உட்கார்ந்தாள். முத்தையா அவள் எழுந்து சாய்ந்து கொள்ளத் தலையணையை முட்டுக் கொடுத்தான்.
"இனிமே அந்த கேசவனோட சேராம இருப்பியா?"