"சேரமாட்டேன். சத்தியம்மா!" கண்களைத் துடைத்துக் கொண்டான்.
"அப்படின்னா அந்தக் கேசவனையே இங்க கொண்டாந்து எனக்குச் சத்தியம் பண்ணிக் கொடுக்கச் சொல்லு!"
அதிர்ச்சியடைந்தான். கேசவனா? அவன் வருவானா? எப்படி வருவான்?
"என்னப்பா அப்படிப் பாக்கிற? வருவானா?"
"அம்மா! அவன் வருவானா இல்லையான்னு தெரிலம்மா! அவன் எதுக்கு? ஆனா நான் இனிமே அவன் கிட்டயே போக மாட்டேம்மா!"
"முடியாது முத்தையா! நீ போக மாட்டே! ஆனா அவன் வந்தான்னா ஒட்டிக்குவ. ஒன்னால அவன எதிர்த்து நிக்க முடியாது. அவன வரச்சொல்லு. எங்கிட்ட சத்தியம் பண்ணிக் கொடுக்கச் சொல்லு!"
"அம்மா!"
"அதுவரைக்கும் நான் சாப்பிட மாட்டேன். இதே கட்டில்! இங்கேயேதான் என் உயிர் போகும்!"
*** *** ***
சைக்கிளை எடுத்துக் கொண்டு தலை தெறிக்கும் வேகத்தில் வந்து கேசவனின் அடுக்குமாடி வீட்டை அடைந்த போது இரவு மணி ஒன்பதாகி விட்டது. கேசவன் இருக்கிறானோ இல்லையோ தெரியவில்லை. கீழே அவன் மோட்டார் சைக்கிளைப் பார்க்க முடியவில்லை. தயக்கத்தோடு கதவைத் தட்டினான்.
திறந்தது கேசவனின் அம்மா. அலங்காரம் ஒன்றுமில்லாமல் சூம்பிப் போன முகத்துடன் தலை முடி விரிந்து கிடந்தாள். "என்னா வேணும்?" என்று கேட்டாள். அவள் குரல் முரட்டுத் தனமாக இருந்தது.