அவன் கையைப் பிடித்து அழைத்துப் போகாமல் விடுவதில்லை.
அந்த மலிவு விலை அடுக்குமாடிக் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் எங்கோ மூலையிலிருந்து மூத்திர மணம் வந்தது. கொஞ்சம் தூரத்தில் சீனர் அங்காடிக் கடைகளில் கொய்த்தியோவும் மீயும் பிரட்டுகின்ற மணமும் சத்தங்களும் வந்தன. தொடைகளில் முழங்கைகளை முட்டுக் கொடுத்துக் கொண்டு முத்தையா காத்திருந்தான். மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படும் இடத்தில் அவன் பார்வை நிலைத்திருந்தது. கேசவன் வந்தால் அங்குதான் வந்து நிற்பான். பிடித்துவிடலாம்.
அம்மா எப்படி இருப்பாள் என்ற நினைவே புரண்டு புரண்டு வந்ததது. அவள் படுக்கையில் ஒரு கந்தல் துணி போல நைந்து போய்க் கிடந்தது ஞாபகத்திற்கு வந்தது. "அம்மா! எங்களை விட்டுப் போய்விடாதே! நான் திருந்தி விட்டேன்! நான் குடும்பத்தைக் காப்பாற்றுவேன்! எனக்காகக் காத்திரு!" மனம் நடுங்கியது.
ஒன்பது மணியளவில் கேசவன் மோட்டார் சைக்கிளோடு வந்தான். அவன் நிறுத்து முன் அவனை நோக்கி ஓடினான் முத்தையா.
"என்னடா முத்தையா, இந்த நேரத்தில!"
"கேசவா. நீ இப்பவே என்னோட எங்க வீட்டுக்கு வரணும்"
"உங்க வீட்டுக்கா? ஏன்? என்ன விஷயம்?"
எப்படிச் சொல்வது என்று யோசித்தான். "கேசவா எங்க அம்மா சாகப் பிழைக்க கெடக்கிறாங்க!"
"ஏன்? என்ன சீக்கு?"
"சீக்கு இல்லடா. அன்னைக்கு நாம ரெண்டு பேரும் பள்ளிக் கூடம் போகாம இங்க வீடியோ பாத்தது அம்மாவுக்குத் தெரிஞ்சி போச்சி! அதினால இனிமே நான் அப்படியெல்லாம் செய்யக் கூடாதுன்னு மூணு நாளா சாப்பிடாம இருக்காங்க!"