என் உயிரே! - இந்திய சுதந்திர தின சிறப்பு சிறுகதை

சோம்பலான ஞாயிற்று கிழமை... ஏதோ ஒரு பாடலை முனுமுனுத்தப் படி சமையலில் ஈடுப் பட்டிருந்தாள் மித்ரா... அவளுடைய கணவனும் அருகில் இல்லை... ஆனால் இந்த தனிமை எல்லாம் இன்னும் சில மாதங்கள் தான் சரியாக சொன்னால் வெறும் ஆறு மாதங்கள் தான். அதன் பின் துஷ்யந்த் – மித்ரா பெயர் சொல்ல சிறு குழந்தை ஒன்று வர போகிறது... மென்மையாக வயிற்றை தடவியவளுக்கு மெய் சிலிர்த்தது... கணவனின் அருகாமைக்காக மனம் ஏங்கியது... துஷ்யந்த் எங்கே யாருடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறானோ!
கணவனின் நினைவில் மனம் ஏங்க, அடுப்பின் தணலை குறைத்து விட்டு அவர்களின் அறையினுள் சென்றாள் மித்ரா. கணவனின் வார்ட்ரோபை திறந்து மூச்சை உள்ளே இழுத்தாள்... துஷ்யந்தின் மணம்... அவனுக்கே பிரத்தியேகமான மணம் அவளின் நாசியில் நுழைந்தது... ஒரு சில நிமிடங்கள் கண்களை மூடி காற்றை உள்ளே இழுத்து அனுபவித்தவள், வார்ட்ரோபை மூடி விட்டு கட்டிலில் இருந்த அந்த தலையணையை எடுத்தாள்...
சுவரில் இருந்த புகைப்படத்தில் ராணுவ உடையில் வீரம் முகத்தில் மின்ன சிரித்துக் கொண்டிருந்தான் துஷ்யந்த்... அவளுக்கு மிகவும் பிடித்த படம் அது... அதை பார்த்தபடி தலையணையை மார்புடன் அணைத்துக் கொண்டாள். விடுமுறையில் வந்து செல்லும் ஒவ்வொரு முறையும் அந்த தலையணையை அவளுக்காக தன் சுவாசக் காற்றினால் ஊதி தயார் செய்து தருவான் அவன்... ஒவ்வொரு முறையும் அதை பொக்கிஷமாக பாதுகாத்து அவன் வரும் வரை வைத்திருப்பாள் அவள்...
வார நாட்களில் வேலைக்கு விடிகாலையில் சென்று இரவு திரும்புவதால் நேரம் செல்வது தெரியாது... வார இறுதி நாட்களில் தனிமை அவளை இது போல் கொல்லாமல் கொல்லும்...
ராணுவத்தில் மேஜராக இருந்த துஷ்யந்திற்கு குவார்ட்டர்ஸ் வசதி உண்டு. ஆனால் அவனுக்கு கர்ப்பமாக இருந்த மனைவியை அங்கே அழைத்து செல்ல மனம் வரவில்லை...
கணவனை நினைத்தபடி ஒரு வழியாக சமையலை முடித்தவள், டிவியை ஆன் செய்து சோபாவில் அமர்ந்து மதிய உணவை உண்ண தொடங்கினாள்.. டிவியில் ஓடிய நிகழ்ச்சிகளில் மனம் செல்லாததால் மாற்றிக் கொண்டே வந்தவள், துஷ்யந்த் என்பது போல் ஏதோ காதில் விழவும், அந்த சேனலில் நிறுத்தினாள்...