எனக்கு இதெல்லாம் எதுவுமே பிடிக்கலை. என்னை மாதிரி ஒரு சொட்டை தலையனை எந்த பொண்ணுக்கும் பிடிக்காதுன்னு தெரியும். தயவு செய்து இது எதுவுமே வேண்டாம். நான் கிளம்பறேன்.
அவனது மனமும் அதில் இருந்த தாழ்வு மனப்பான்மையும் அவளுக்கு சட்டென புரிந்தது.
விடாமல் கேட்டாள் அது எப்படி யாருக்குமே உங்களை பிடிக்காதுன்னு நீங்களா முடிவு பண்றீங்க? நான் கேட்டது உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கான்னு?
'எனக்கு எந்த பொண்ணையும் பிடிக்கலை. எனக்கு பிடிச்சது எங்க அம்மாவை மட்டும்தான். என்னோட உயிரே அவதான். போயிட்டா. என்னை தனியா விட்டுட்டு போயிட்டா. நாலு வருஷம் ஆயிடுச்சு. அதோட என் வாழ்கை முடிஞ்சு போச்சு. குரல் கரைய, கண்கள் கலங்க சொன்னவன், ப்ளீஸ் இதெல்லாம் எதுவும் வேண்டாம் நான் கிளம்பறேன்.' சொல்லிவிட்டு சென்றுவிட்டிருந்தான்.
எப்படி என்றே தெரியாமல் அவள் மனதில் ஒட்டிக்கொண்டான். அன்புக்கு ஏங்கும் குழந்தையாகவே அவளுக்கு தெரிந்தான் அவன். அவன்தான் தனக்கானவன் என்று அப்போதே முடிவு செய்திருந்தாள் அவள்.
திருமணம் முடிந்ததிலிருந்து அவனை தனது அன்பு மழையில் நனைய வைத்துவிட வேண்டுமென்றே முயன்றுக்கொண்டிருக்கிறாள் அவள். எங்கே? அவளருகில் ஒரு நொடி நின்று அவளை நிமிர்ந்துகூட பார்ப்பதை தவிர்க்கிறானே அவன். என் மனதில் இருப்பதை அவனுக்கு எப்படி புரிய வைப்பது?
சில நிமிடங்கள் கழித்து கீழே இறங்கினாள் அவள். மனம் நிலையில்லாமல் தவித்து துவண்டது. இந்த ஒரு மாதத்தில் எனக்காக அவன் மனம் ஒரு நொடி கூட துடிக்கவில்லையா?
அவன் அறை கதவு மூடப்பட்டிருந்தது. ஏனோ மனம் தவித்தது. கதவை மூடிக்கொண்டு உள்ளே என்ன செய்கிறான் அவன்.
யோசனையுடன் கைப்பேசியை எடுத்து அவன் எண்ணை அழுத்தினாள் அவள். சோபாவின் மீதே ஒலித்தது கைப்பேசி.
மெல்ல நிமிர்ந்த அவள் பார்வை அந்த கைப்பேசியில் பதிய அடுத்த நொடி அவள் கண்களில் மகிழ்ச்சி மின்னல். இந்த ஒரு மாதத்தில் எனக்காக அவன் மனம் ஒரு நொடி கூட துடிக்கவில்லையா? கேள்விக்கான விடை சட்டென கிடைத்தது அவளுக்கு.
கைப்பேசி ஒலிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்துகொண்டு வெளியே வந்தவனின் முகத்தை சில நொடிகள் இமைக்காமல் பார்த்தவள், மனம் நிறைந்த சந்தோஷத்துடன் மாடியேறி சென்று விட்டிருந்தாள்.
மறுநாள் காலை அவன் அலுவலகத்துக்கு சென்றவுடன், அவனது அறைக்குள் சென்றாள் சுப்ரஜா, என்ன செய்தால் இந்த கல்லை கரைக்க முடியும் என்று யோசித்தபடியே.
அறையை சுற்றி பார்வையை சுழல விட்டவளின் கண்கள் மெல்ல மெல்ல விரிந்தன.
அங்கே அவனது அம்மாவின் ஆளுயர புகைப்படம். அதனருகில் சில இசைக்கருவிகள். அந்த இசைக்கருவிகளின் மீது தூசி படிந்து கிடந்தது.
யோசனையுடனே நின்றவள் அவனது தங்கையை அழைத்தாள் 'எனக்கு உங்க அண்ணனை பத்தி உன்கிட்டே கொஞ்சம் பேசணும்'
நினைச்சேன். நான் சொன்ன ஒரு மாச கணக்கு முடிஞ்சு போச்சில்ல? நான் அப்பவே சொன்னேன். நீ தான் கேட்கலை.' சிரித்தாள் அவன் தங்கை ராதா.
'ப்ளீஸ் ராதா. நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு'. அவள் குரல் அழுத்தமாய் ஒலிக்க, இறங்கிய குரலில் சொன்னாள் ராதா ' சரி என்ன வேணும் சொல்லு?'
மாலை அவன் வீட்டுக்குள் நுழைந்த நேரத்தில், அவன் அறையில் அமர்ந்திருந்தாள் அவள். அவள் மடியில் அவனது அம்மாவின் வீணை.
ஹேய்.. எதுக்கு என் ரூமுக்கு வந்தே? இதையெல்லாம் எதுக்கு நீ... அவன் பேசி முடிப்பதற்குள் ஒலித்தது வீணை.
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ.
அப்படியே அமர்ந்துவிட்டிருந்தான் அவன். பாடல் முடியும் வரை ஒரு துளி அசைவில்லை அவனிடத்தில்.
பாடல் ஒலித்து முடிந்ததும் இறங்கிய குரலில் கேட்டான். இன்னொரு தடவை வாசிக்கறியா?
மறுபடியும் ஒலித்தது பாடல். இரண்டு ஜோடி கண்களிலும் கண்ணீர்.
பாடல் நிறைவடைந்தும் மெல்ல சொன்னான் அவன் 'எங்கம்மாவை மறபடியும் பார்த்த மாதிரியே இருந்தது. தேங்க்ஸ்.
தேங்க்செல்லாம் வேண்டாம். உங்கம்மாவுக்கு உங்க மனசிலே நீங்க கொடுத்த இடத்திலே ஒரு பாதி இடம் எனக்கு கொடுங்க போதும்.
சட்டென எழுந்து விட்டிருந்தான் அவன். 'வேண்டாம். இதெல்லாம் சரியா வராது'
ஏன் சரியா வராது?
நீ தேவை இல்லாம உன் வாழ்கையை கெடுத்துக்காதே. என்னை மாதிரி ஒருத்தன் கூட வாழணும்னு உனக்கு என்ன தலையெழுத்தா? எனக்கே என்னை பிடிக்கலை. என்னையெல்லாம் எந்த பொண்ணுக்கும் பிடிக்காது.
யோவ்! அறிவிருக்காயா உனக்கு? திரும்ப திரும்ப அதையே சொல்லிட்டிருக்கே அவள் ஒருமைக்கு மாற சட்டென நிமிர்ந்தான் அவன்.
ஒரு பொண்ணு ஒரு மாசமா நீ எவ்வளவு திட்டினாலும் உன் பின்னாலேயே சுத்திட்டிருக்கா. பிடிக்காமலா சுத்துவாங்க? செல் போன்லே என் நம்பரை 'கண்மணி' ன்னு போட்டு அழகா சேவ் பண்ண தெரியுது. என் மனசு புரியலையா உனக்கு.
அது... அது ...இல்லை.... அவன் தடுமாற....
'எல்லாம் இருக்கு என்றாள் அவள். எனக்கு உன்னை பிடிச்சிருக்குயா. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு மொத்தமா பிடிச்சிருக்கு..' அவள் படபடக்கும் விழிகளுடன் சொல்ல இமைக்க மறந்திருந்தான் அவன்.
அவன் பார்வையில் தன்னிலை பெற்றவளின் குரல் மெல்ல இறங்கியது 'உங்க அம்மா மேலே நீங்க உயிரே வெச்சிருந்திருக்கீங்க. உங்க அம்மா படுத்த படுக்கையா இருந்தப்போ அவங்களுக்கு எல்லா பணிவிடையும் செய்திருக்கீங்க என்னை பொறுத்த வரைக்கும் நீங்க ஒரு பெரிய ஹீரோ. உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு'.
எங்க அப்பா அம்மா ரெண்டு பேருமே ரொம்ப பிசியானவங்க. என்னோட வாழ்கையிலே பாதி நாள் ஹாஸ்டல்லேயே கழிஞ்சு போச்சு. பாசத்துக்காக நான் பல நாள் ஏங்கி இருக்கேன். எனக்கு உங்க பாசம் வேணும். உங்க அம்மா மேலே நீங்க வெச்ச பாசத்திலே ஒரு பாதி என் மேலே வெச்சா போதும், எனக்கு வேறே எதுவுமே வேண்டாம். ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோங்க.' கெஞ்சலாய் சொன்னவள், ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்தாள்....
நான் இனிமே உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன். கொஞ்ச நாள் உங்க கண் முன்னாலேயே வர மாட்டேன். நீங்களா என்னை கூப்பிடற வரைக்கும் வரமாட்டேன். நீங்க என்னை புரிஞ்சிப்பீங்கங்கிற நம்பிக்கையிலே வெயிட் பண்ணிட்டிருப்பேன்.' சொல்லிவிட்டு நகர்ந்து விட்டிருந்தாள் சுப்ரஜா.
ஒரு வாரம் கடந்திருந்து. அவள் அவன் கண் முன்னால் வருவதை முற்றிலும் தவிர்த்து விட்டிருந்தாள்.. ஆனாலும் அவள் குரல் அவனுக்குள்ளே ஒலித்துக்கொண்டே இருந்தது.
எனக்கு உன்னை பிடிச்சிருக்குயா. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு மொத்தமா பிடிச்சிருக்கு..' என்ன மாயம் இருந்ததோ அந்த வார்த்தைகளில் அவனுக்கே தெரியவில்லை. அவனே அறியாமல் அவனுக்குள்ளே பல மாற்றங்கள் வர துவங்கி இருந்தன.