எரிச்சலாய் வந்தது கல்யாணி மாமிக்கு...
எனக்கு அப்பிடில்லாம் ஆச இல்ல..கடசி காலத்துல கட்டின புருஷன தனியா தவிக்க விட்டுட்டு பூவோடயும் பொட்டோடயும் போகணும்னு ஆசப் படறது சுயனலம்.புருஷனில்லாம பொம்பளைங்க தனியா வாழற மனவுறுதி அவாளுக்கு உண்டு. ஆனா பொண்டாட்டி போய்ட்டா ஆம்பளைக்கு எல்லமே போச்சு..ஒரு காபிக்கும் சோத்துக்கும் பொறத்தியார் கைய எதிர்பாக்கற ஆம்பளைங்க படற பாடு..சொல்லிமாளாது..தேவையான நேரத்துக்கு காபி கெடைக்காது பசிக்கிற நேரத்துல வயத்துக்கு சாப்பாடு கெடைக்காது..ஒரு ஜுரம் தலைவலின்னா வென்னீர் கூட இன்னூத்தர கேக்க முடியாது..அவா இஷ்டப்பட்டு குடுத்தா உண்டு இல்லேன்ன வார்த்தையால மூஞ்சில அடிச்சுட்டுப்போவா....ஒரு ஆம்பளய கட்டின பொண்டாட்டி மாதிரி யாராலும் பாத்துக்க முடியாது..ஆனா பொம்பளைங்க பாடு அப்பிடி இல்ல..மாட்டுப்பொண்ணோட சண்ட போட்டாவது தனக்கு வேணுங்கறத வாங்கிடுவா..இல்லியா கிச்சனுக்குப் போயி தானே செஞ்சுப்பா அது முடிலயா தானே ஒரு மூலைல சமச்சுக்க ஆரம்பிச்சுடுவா..என்னப் பொறுத்தவரை எங்காத்து மாமாக்கு முன்னாடி நாம்போயி...யார் கைலயும் அவர அனாதயா விட்டுட்டுப் போக மாட்டேன்..
ஆவேசம் வந்தவர்போல் பேசும் அவரை வாயைத்திறந்தபடி பார்த்துக்கொண்டிருந்தனர் மற்ற பெண்கள்.யாரும் பேசவே இல்லை.
சரி...நா வரேன் என்று சொல்லியபடி உள்ளே வந்தார் கல்யாணி மாமி.
வியாழக்கிழமை சிவராமனின் அப்பாவுக்கு சிரார்த்தம்(நினைவு நாள்)காலை ஐந்து மணிக்கே எழுந்துவிட்டார் மாமி..விசேஷ சமையல் ஒரு பக்கம் பட்சணங்கள் ஒரு பக்கம் ஹாலில் நடக்கும் ஹோமத்தில் அவ்வப்போது கலந்து கொள்ளுதல் ஒரு பக்கம் என்று தனியாளாக சுழன்று கொண்டிருந்த மாமிக்கு லேசாக தலையைச் சுற்றுவது போல் இருந்தது.சாமாளித்துக்கொண்டார் மாமி.
காலையிலிருந்து இதோ கிட்டெத்தட்ட ஒரு மணியாகும் வரை எதுவும் சாப்பிடாததால் தலையைச் சுற்றுகிறதோ என்னவோ..சுகர் பேஷண்ட் வேற...தனக்குத்தானே சொல்லிக்கொண்டார் மாமி.
ஆயிற்று...ஒரு வழியாய் மாலை நாலு மணி வாக்கில் எல்லா வேலையும் முடிய பேசாமல் துணியை விரித்துப்போட்டு படுத்துவிட்டார் மாமி.
ஹோமப்புகையில் ரொம்ப நேரம் இருந்ததால் சிவராமனுக்கு தொண்டையெல்லாம் ஒரே எரிச்சல் அவரும் சோபாவில் படுத்துவிட்டார்.
இரவு ஆளுக்கொரு டம்ளர் காபியோடு சரி.சிவராமன் ஹாலிலேயே படுத்துவிட..மாமி பெட்ரூமில் போய் படுத்துக்கொண்டார்.மீண்டும் தலையைச் சுற்றுவது போல் இருந்ததுமாமிக்கு.நடு நெஞ்சில் பளீர் பளீர் என்று ஒரு வலி....
காமாக்ஷி...என்று சொல்லிக்கொண்டே கண்களை மூடிக்கொண்டார் மாமி.
Related Read: உறவுகள் சுகமானவை... - தங்கமணி சுவாமினாதன்
காலை வழக்கம் போல் ஆறு மணிக்கே எழுந்து விட்ட சிவராமன் டிவியை ஆன் செய்து பக்திப் பாடலைக் கேட்டபடி உட்கார்ந்திருந்தார்.
டாண் என்று ஆறேகாலுக்கே காபியைக் கொண்டுவந்து மேஜை மீது கணவருக்கு வைத்துவிட்டு சேரில் அமர்ந்தபடி தானும் காபி குடித்தபடி ந்யூஸ் பேப்பரை மேலோட்டமாகப் பார்க்கும் கல்யாணி அன்று ஏனோ இன்னும் எழுந்திருக்கவேயில்லை.
பாவம் முதல் நாள் மாங்குமாங்கென்று வேலை செய்த களைப்பில் கல்யாணி தூங்கறா போலருக்கு
இன்னிக்கு நாமே காபி போட்டு அவள் எழுப்பலாமே என்று சிவராமன் பாக்கெட் பாலை அடுப்பில் வைத்துக்காச்சி முதல் நாளிரவே பில்டரில் போட்டுவைத்திருந்த டிகாக் ஷனை கலந்து தனக்கும் கல்யாணிக்குமாய் டபரா டம்ளர்களில் ஊற்றிக்கொண்டு வெளியே வந்தார்.தனக்கானதை மேஜை மீது வைத்து விட்டு மாமி படுத்திருக்கும் அறைக்குச் சென்று ....
கல்யாணி....தோ பாரேன் இன்னிக்கு னா னே காபி போட்டுட்டேன்.எழுந்து வாய சும்மா கொப்பிளுச்சுட்டு காபிய குடி... லேட்டாவே எழுந்துக்கோ..அவசரம் ஒண்ணுமில்ல..
மாமியை எழுப்பினார் சிவராமன்...மாமியிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் போகவே காபியை பக்கத்திலிருந்த ஸ்டூலில் வைத்துவிட்டு மாமியின் தோளைத்தொட்டுக் குலுக்கினார் சிவராமன்.
உடல் சில்லிட்டிருக்க குலுக்கியதால் தலை இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் ஆடியது.
கல்யாணீ.............கத்தினார் சிவராமன்.
ஹாலின் நடுவே கிடத்தப்பட்டிருந்தார் கல்யாணி மாமி.பிள்ளைகளும்,பெண்ணும் வந்தாயிற்று.
ஹாலின் மூலையில் சேரில் அமர்ந்தபடி கால் நீடிப்படுத்துகிடக்கும் தன் மனைவி கல்யாணியையே வெறிக்கப் பார்த்தபடி இருந்தார் சிவராமன்.கால்வைத்து நிற்கக்கூட முடியாமல் கூட்டம்.பெரிய பிள்ளை ராமசந்திரன் ஈர பஞ்சகச்ச வேட்டி துண்டோடு சாஸ்திரிகள் சொல்லும் மந்திரங்களை துக்கத்தால் தொண்டை அடைக்க சொல்ல முடியாமல் சொல்லிகொண்டிருந்தான்.
பெண்ணும் மாட்டுப்பெண்களும் அழுதபடியே கல்யாணி மாமிக்கு செய்ய வேண்டியவங்களைச் செய்ய கழுத்தில் ரோஜாப்பூ மாலையோடும் முகத்தில் மஞ்சள் குங்குமமுமாக மாமி கடைசி யாத்திரைக்கு கிளம்பியாயிற்று. மெதுவே சாம்பு சாஸ்திரிகள் சிவராமனிடம் வந்து...
சிவராமன் சார்..கடசியா மாமி முகத்த ஒரு தடவ பாருங்கோ..என்ன பண்றது..அவன் எப்ப கூபடறானோ அப்ப கெளம்பித்தானே ஆகணும்.. எழுந்திருங்கோ...மகராசி மொகத்த ஒரு தடவ பாத்துடுங்கோ...
ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தார் சிவராமன்...சிவராமன் சார்..தோளைத் தொட்டார் சாம்பு சாஸ்த்ரி..
சட்டென சிவராமனின் உடல் சேரின் ஒரு பக்கமாக சாய அவரின் தலை தொங்கியது.
அல்லோலகல்லோலப் பட்டது அந்த இடம்.
அடி..மகராசி..நேத்துதானே சொன்ன...நா எம் புருஷன யார் கையிலயும் விட்டுட்டு சுமங்கலியால்லாம் போகமாட்டேன்னு..ஆனாலும் நீ பூவோடயும் பொட்டோடயும்தான் போன அப்பிடி போனாலும் நீ சொன்னபடியே ஒம் புருஷன யார் கையிலும் விடாத ஒங்கூடவே அழ்ச்சுண்டு போய்டியேடி.என்று வயதான பெண் ஒருவர் வாய்விட்டுச் சத்தம்போட்டு சொல்லி அழ....
அங்கு இருந்த அனைவரும் துக்கம் தாளாமல் வாய்விட்டு அழுதனர்.....
கல்யாணி மாமியின் உயிர் சிவராமனின் உயிரைத்தன்னோடு அழைத்துப்போயிற்றா அல்லது சிவராமன் தன் உயிர் கல்யாணியோடது என்று தன் உயிரை கல்யாணி மாமியின் உயிரோடு சேர்த்துக்கொண்டாரா.....நமக்குத்தெரியாது.
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.