அவர் அவனைப் பரிசோதித்து விட்டு வேறு ஏதேனும் நோய்த் தொற்று ஏற்ப்பட்டிருக்கலாம். எதற்கும் ஒரு இரத்தப் பரிசோதனை செய்து விடலாம் என்று சொல்ல, பக்கத்தில் இருக்கும் பரிசோதனை நிலையத்திற்கு சென்று டெஸ்ட்டிற்கு கொடுத்து விட்டு, மறுநாள் வந்து வாங்கிக் கொள்வதாகக் கூறி வீடு வந்தார்கள்.
அந்தச் சின்ன அலைச்சலைக் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் ரகு சோர்ந்து விட்டான்.
மறுநாள் காலையில் மறுபடியும் ரகுவின் ஜுரம் ஏறி இருக்க, வயிற்று வலியால் வேறு துடிக்க ஆரம்பித்து விட்டான் ரகு.
“என்னங்க இது இப்படி இருக்கான். எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க”
“நான் இன்னைக்கு லீவ் போட்டுடறேன்ம்மா. நான் அவனைக் கூட்டிட்டு டாக்டர் கிட்ட போயிட்டு வந்துடறேன்”
“சரிங்க, முதல்ல நாம கொடுத்த டெஸ்ட் ரிசல்ட் ரெடி ஆகிடுச்சான்னு கேட்டுடுங்க. ரகுவை வைச்சுட்டு ரொம்ப அலைய முடியாது”, என்று லதாங்கி கூற, முரளியும் அவர்களுக்கு ஃபோன் செய்து ரிசல்ட் ரெடியாக இருப்பதை உறுதி செய்து கொண்டு ரகுவை அழைத்துக் கொண்டு டாக்டரை பார்க்க சென்றான்.
அவன் அந்தப்புறம் சென்றதும் லதாங்கி குருஜியை அழைத்து ரகுவின் நிலையை சொல்லி அழ ஆரம்பிக்க, குருஜியும் எல்லாம் அவன் ஜாதகத்தினால்தான் அவர் அவன் பேரில் விசேஷ பூஜை செய்து பிரசாதத்தை தன் சிஷ்யன் மூலம் கொடுத்தனுப்புவதாக சொல்ல, சிறிது ஆருதல் பெற்றாள் லதாங்கி.
டாக்டரை பார்த்துவிட்டு வந்த முரளி, ரகுவிற்கு மஞ்சள் காமாலை வந்திருப்பதாகவும், அதற்கு டாக்டர் மருந்து கொடுத்திருப்பதாகவும், சாப்பாட்டில் மிகுந்த கவனமுடன் இருக்குமாறும் லதாங்கியிடம் கூறினான்.
“லதா, அவனுக்கு இன்னும் ஒரு மாசத்துக்கு பத்திய சாப்பாடுதான் கொடுக்கணும்ன்னு டாக்டர் கண்டிப்பா சொல்லிட்டார். நீ பாட்டுக்கு அவன் கேட்டான்னு கண்டதையும் கொடுத்துடாத. எண்ணெய்ப் பதார்த்தம் அறவே கூடாதுன்னு சொல்லி இருக்காரு. அதனால அதையும் கொடுத்துடாத. இந்தா, இந்தப் பேப்பர்ல அவனுக்கு சாப்பாட்டுக்கு என்ன எல்லாம் கொடுக்கலாம் அப்படின்னு எழுதிட்டு வந்திருக்கேன். அதை அப்படியே follow பண்ணு. சரியா”
“அப்பாடா, எழுதிட்டே வந்துட்டீங்களா. இனிக் குழப்பமே இல்லை. கரெக்டா டாக்டர் என்ன சொல்லி இருக்காரோ அப்படியே செஞ்சுடறேன்”
“சரிம்மா மணி பதினொண்ணு ஆகுது. நான் போய் ரகுவோட ஸ்கூல் டீச்சர் பார்த்து லீவ் லெட்டர் கொடுத்துட்டு அப்படியே அவங்க ஸ்கூல்ல நடத்தற பாடத்தை பக்கத்து வீட்டுல இருக்கற மணிக்கிட்ட கொடுக்க சொல்லி சொல்லிட்டு வரேன்”
“நீங்க இப்போத்தானே கார்த்தாலேர்ந்து அலைஞ்சுட்டு வர்றீங்க. நான் வேணாப் போயிட்டு வரவா”
“இல்லை வேண்டாம் லதா. நான்னா கார்லயே போயிட்டு வந்துடுவேன். நீ ஆட்டோ தேடி அலையணும். ரகுக்கும் பசிக்கும் அவனுக்கு சாப்பிட பண்ணிக் கொடு”, என்று விட்டு செல்ல, எப்பொழுதும் போல் டெஸ்ட் ரிசல்ட்டை குருஜியிடம் ஃபோன் செய்து சொன்னாள் லதாங்கி. அவரும் தான் பூஜை முடித்து தன் சிஷ்யனிடம் பிரசாதம் கொடுத்திருப்பதாகவும் அதை வாங்கி ரகுவிற்கு கொடுக்கும்படியும் கூற, தான் அவர் கூறியபடியே செய்வதாகத் தெரிவித்தாள் லதாங்கி.
இந்த முறை அவர் அம்மனுக்கு சாற்றியதாகக் கூறி ஒரு எண்ணையும் கொடுத்து அதையும் தினம் அவனுக்கு கொடுக்க சொன்னார். லதாங்கியும் குருஜி சொன்னதை அப்படியே செய்ய ஆரம்பித்தாள். என்னதான் டாக்டரின் மருந்து கொடுத்தும், பத்திய சாப்பாடு சாப்பிட்டும் ரகுவின் நிலையில் முன்னேற்றம் இல்லாமல் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருந்தது. ஒரு நாள் இரவு மயங்கும் அளவிற்கு வயிற்று வலியில் ரகு துடிக்க அவனைத் தூக்கிக் கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றார்கள் முரளியும், லதாங்கியும். அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர், அவனுக்கு மஞ்சள் காமாலை முற்றிய நிலையில் இருப்பதாகக் கூறி அவனை மருத்துவ மனையில் அட்மிட் செய்ய சொன்னார். நர்ஸிடம் திரும்பி அவனுக்கு சில பரிசோதனைகள் செய்ய சொல்லிவிட்டு, முரளி தம்பதியரை தன்னுடன் அறைக்கு வருமாறுக் கூறிச் சென்றார்.
அவரின் தனியறைக்குள் வந்தவுடன், இதுவரை அவனுக்கு எடுத்த பரிசோதனைகள், அவன் எடுத்துக் கொண்ட மருந்துகள் ஆகியவற்றை மறுபடி ஒரு முறை பார்த்து விட்டு முரளி தம்பதியரைப் பார்த்து, “உங்க டாக்டர் சரியான மருந்துதான் கொடுத்திருக்கார். இந்த நேரத்துக்கு ஜாண்டிஸ் கண்ட்ரோல்ல வந்திருக்கணுமே. எப்படி ஜாஸ்தி ஆச்சு. நீங்க சாப்பாடு பத்தியம் இல்லாம, காரம், எண்ணெய்ப் பண்டம் இப்படி கொடுத்துட்டீங்களோ”, என்று கேட்க, அதற்கு லதாங்கி, எண்ணெய், மற்றும் காரம் அறவே இல்லாமல்தான் அவனுக்கு சாப்பாடு கொடுத்ததாகக் கூறினாள். பின் எப்படி இப்படி ஆனது எதற்கும் பரிசோதனை முடிவுகள் வந்த பின்பு என்ன செய்வது என்று பார்க்கலாம். இப்போதைக்கு அவன் இன்னும் இரண்டு நாட்கள் அவர்கள் கண்காணிப்பிலேயே இருக்கவேண்டும் என்றும், அவனுக்கு வெளியில் இருந்து எதுவும் கொடுக்க வேண்டாம், மருத்துவ மனையிலேயே அவனுக்கான உணவு தருவார்கள் என்றும் கூற, முரளி தம்பதியரும் அவர் கூறியதைக் கேட்டுக் கொண்டு ரகு இருந்த அறைக்கு வந்தனர். அங்கு கிழிந்த நாராகக் கிடந்த மகனைப் பார்த்த பெற்றோருக்கு கண்ணீர் பெருகியது.
மறுநாள் டெஸ்ட் ரிசல்ட் வர அதில் ஜாண்டிஸ் முற்றிய நிலையில் இருப்பதும் அல்லாமல், வேறு சில தொற்றுக்களும் வந்திருப்பதாக இருக்க முரளி தம்பதியரை தன் அறைக்கு அழைத்தார் டாக்டர்.
“ரகுக்கு ஸ்டமக் ஃபுல்லா புண் ஆகி இருக்கு. இது அந்த டாக்டர் கொடுத்த மருந்தால இருக்காது. நீங்க கண்டிப்பா வெளி சாப்பாடோ இல்லை, வேற எதுவுமோ கொடுக்கலையா”, என்று டாக்டர் கேட்க, முரளி லதாங்கியைப் பார்க்க, இனியும் மறைத்தால் ரகுவிற்கு எதுவும் ஆகிவிடுமோ என்று பயந்த லதாங்கி, தான் குருஜி கொடுத்த பால், எண்ணெய், புற்று மண் ஆகியவற்றைக் கொடுத்ததாகக் கூற,அவளைக் கொலை வெறியுடன் பார்த்தான் முரளி.
“ஏண்டி உனக்கு அறிவே இல்லையா. நான் அத்தனை தூரம் படிச்சு படிச்சு சொன்னேன் இல்லை. அந்த ஆள் ஒரு ஃபிராட் சாமியார் டாக்டர். ஊர ஏமாத்திட்டு திரியறான். எங்க ஆபீஸ்ல வேலை செய்யறவருக்கு தெரிஞ்சவன்தான் அவன். அவன் பேரு ஷங்கர். வேல வெட்டி இல்லாம சுத்திட்டு இருந்தவன். படார்ன்னு ஒரு நாள் ஷங்கராநந்தான்னு பேரை மாத்திட்டு, ஒரு கொட்டகைல ஆசிரம போர்ட் மாட்டி ஆரம்பிச்சுட்டான். இவளை மாதிரி ஏமாந்த கொஞ்சப் பேரை வச்சுட்டு பொழப்ப ஓட்டிட்டு இருக்கான்”, என்று கத்த ஆரம்பித்தான் முரளி,
“Please control yourself Murali. இது ஹாஸ்பிட்டல். இப்படிக் கத்தாதீங்க. ஏம்மா படிச்சவங்கதானே நீங்க. இப்படியா ஒருத்தன் சொன்னான்னு செய்வீங்க. இப்போப் பாருங்க உங்க மூட நம்பிக்கைனால அவஸ்த்தைப்படறது உங்க குழந்தைதான். நீங்க சொல்ற அந்த ஆளே உடம்புக்கு வந்தா எங்க ஹாஸ்பிட்டலுக்குத்தான் வராரு. அவர் ஒண்ணும் மண்ணையும், கல்லையும் திங்கலை. நாங்க கொடுக்கற மருந்துகளைத்தான் சாபிடராறு. சாமி நம்பிக்கை இருக்க வேண்டியதுதான். அதுவே மூட நம்பிக்கையா இருக்கக் கூடாது. சாமியை நம்புங்க, இப்படிப்பட்ட ஆசாமிகளை நம்பி மோசம் போகாதீங்க”, என்று அறிவுரைக் கூற தன்னால் ரகுவின் நிலைமை இப்படி ஆகி விட்டதே என்று வருத்தத்தில் கண்ணீர் மல்க அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் லதாங்கி.
இத்தனை கஷ்டங்களை தங்கள் மகன் பட்டதிற்காகவாவது தன் மனைவி திருந்தினால் சரி என்று மறுபடியும் பழனி முருகன் முதல், பண்ணாரி மாரியம்மன் வரை வேண்டுதல்களை வைக்க ஆரம்பித்தான் முரளி.
{kunena_discuss:785}